கிறிஸ்மஸ் தீவு தடுப்பு முகாம் கடந்தவார இறுதியில் மூடப்பட்டதாக செய்தி வெளியான நிலையில் இதனை உறுதிப்படுத்தியுள்ள ஆஸ்திரேலிய அரசு, அங்கு எஞ்சியிருந்த 35 பேரும் ஆஸ்திரேலியாவிலுள்ள முகாம்களுக்கு அழைத்துவரப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
ஆஸ்திரேலியாவிற்கு படகு மூலம் வந்து புகலிடம்கோருபவர்களைத் தடுத்து வைத்து பரீசிலிக்கவென கடந்த 2008ம் ஆண்டு நிர்மாணிக்கப்பட்ட கிறிஸ்மஸ் தீவு தடுப்பு முகாம், சுமார் 10 ஆண்டுகள் கழித்து கடந்தவார இறுதியில் மூடப்பட்டதை ஆஸ்திரேலிய குடிவரவு அமைச்சர் David Coleman உறுதிப்படுத்தியுள்ளார்.
குறித்த முகாமில் எஞ்சியிருந்த 35 பேர் விமானம் மூலம் ஆஸ்திரேலியாவிலுள்ள தடுப்பு முகாம்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டதாக தெரிவித்த அமைச்சர் David Coleman, அவர்கள் எங்கே அனுப்பப்பட்டார்கள் என்ற விபரத்தை வெளியிடவில்லை .
எனினும் இவர்கள் அனைவரும் சிட்னியிலுள்ள விலவூட் தடுப்பு முகாம், மெல்பேர்ன் குடிவரவு இடைத்தங்கல் முகாம் மற்றும் பெர்த்திலுள்ள Yongah Hill தடுப்பு முகாம் ஆகியவற்றிற்கே கொண்டுசெல்லப்பட்டிருப்பதாக அகதிகள் செயற்பாட்டாளர்களை மேற்கோள்காட்டி செய்தி வெளியாகியுள்ளது.
இதேவேளை தற்போது கிறிஸ்மஸ்தீவு தடுப்பு முகாமில் எவரும் தடுத்துவைக்கப்படவில்லையே தவிர இம்முகாம் ஒரு சில பணியாளர்களுடன் தொடர்ந்தும் தயார்நிலையிலேயே இருக்கும் எனவும் தேவையேற்படின் உடனடியாக மீண்டும் இயங்குநிலைக்குத் திரும்பும் எனவும் குடிவரவு அமைச்சர் தெரிவித்துள்ளார்.
கடந்த செப்டம்பர் 2013 முதல் தற்போதுவரை கிறிஸ்மஸ் தீவு தடுப்பு முகாம் உட்பட சில முகாம்களை மூடியதன்மூலம் சுமார் 500 மில்லியன் டொலர்களுக்கு மேல் அரசு சேமித்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
