தேவாலயத்திற்குள் மனைவியையும் மகளையையும் அனுப்பிவிட்டு காரை தரிப்பிடத்தில் கொண்டுபோய் நிறுத்திவிட்டு வருவதற்காக சென்ற காரணத்தினால் குண்டுவெடிப்பு சம்பவத்தில் தான் உயிர்தப்பிவிட்டதாகவும் சம்பவ இடத்துக்குவந்தபோது தனது மனைவியும் மகளும் தரையில் விழுந்துகிடப்பதையே தான் கண்டதாகவும் கணவனான சுதேஸ் கொலன்னா தெரிவித்துள்ளார்.
நீர்கொழும்பு தேவாலயத்தில் இடம்பெற்ற குண்டுவெடிப்பு சம்பவத்தில் சிக்கி உயிரிழந்த மனிக் சூரியாராச்சி மற்றும் அவரது 10 வயது மகள் ஆகியோருக்கு ஆஸ்திரேலியா உட்பட பல்வேறு பாகங்களிலிருந்தும்அஞ்சலி செலுத்தப்பட்டுவருகிறது.
ஆஸ்திரேலிய பிரஜையான மனிக் சூரியாராச்சி கொழும்பில் தனது தொழில் நிமிர்த்தமாக அதிக காலம் தங்கியிருப்பவர் என்று தெரியவருகிறது.
இவர் 'ஒமேகா குளோபல்" என்ற சர்வதேச வர்த்தக முகாமைத்துவ நிறுவனத்தின் நிறுவுனர். இந்த நிறுவனம் அனைத்துலக ரீதியில் hospitality, marine development, biotech solutions and aviation போன்ற பல்வேறு சேவைகளை வழங்கிவருகின்ற நிறுவனமாகும்.
மனிக் இந்தத்துறையில் பணிபுரிவதற்கு முன்னர், ஆஸ்திரேலியாவில் Swinbourne பல்கலைக்கழகத்தில் கல்வி கற்றவர். அங்குதான் இவரது கணவர் சுதேசும் மேற்படிப்பை தொடர்ந்தார் என்று கூறப்படுகிறது.
மனிக் வர்த்தக முகாமைத்துவம் மாத்திரமல்லாமல், தொழில்துறை சட்டக்கற்கை நெறி, விமானத்துறை பொறியியல் ஆகியவற்றையும் படித்திருக்கிறார்.
சொந்த நிறுவனம் ஆரம்பிப்பதற்கு முன்னர் ஆஸ்திரேலியாவில் Qantas மற்றும் NAB நிறுவனங்களிலும் மனிக் பணிபுரிந்திருக்கிறார். மனிக்கின் கணவர் விமானத்துறை பொறியியலாளர்.
தனது குடும்பத்தினருடன் 2014 ஆம் ஆண்டளவில் நீர்கொழும்பு சென்று அங்கு சுகவீனமடைந்துள்ள தாயாருடன் தங்கியிருந்து அவருக்கு உதவிய மனிக் சூரியாராச்சி தொடர்ந்து இலங்கையிலேயே குடும்பத்தினருடன் தங்குவதற்கு முடிவெடுத்திருந்தார் என்றும் கூறப்படுகிறது.
சம்பவம் இடம்பெற்ற அன்று நீர்கொழும்பு தேவாலாயத்துக்கு வழிபாட்டுக்காக சென்ற மனிக் மற்றும் அவரது பத்து வயது மகள் துரதிஷ்டவசமாக தேவாலயத்துக்குள் அகப்பட்டு பலியாகியுள்ளனர்.
மெல்பேர்னில் நேற்று நடைபெற்ற நினைவு அஞ்சலிப்பேரணியில் கலந்துகொண்ட மனிக் குடும்பத்தினரின் நண்பர்கள் கண்ணீர் மல்க தங்களது அதிர்ச்சியை வெளிப்படுத்தினர்.
