நாடாளுமன்றத்தில் அரசு முன்வைத்துள்ள குடியுரிமை – Citizenship தொடர்பான புதிய சட்ட முன்வடிவிற்கு எதிராக, இணையமூடாக கையெழுத்து சேகரிக்கும் முயற்சியில் எதிர்கட்சியான லேபர் கட்சி இறங்கியுள்ளது.
இதுவரை பத்தாயிரம் பேருடைய கையெழுத்துக்கள் பெறப்பட்டுள்ளதாகவும், இவ்வாறு சேகரிக்கப்படும் கையெழுத்துக்கள் அடங்கிய மனு நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படும் எனவும் அக்கட்சி தெரிவித்துள்ளது.
புதிய குடிவரவுச் சட்டமுன்வடிவு தொடர்பில் கடந்த ஏப்ரல் 20ம் திகதி அரசு அறிவித்தபோது அதிலுள்ள சில அம்சங்கள் நியாயமானவையாக இருப்பதால் அதற்கு ஆதரவு வழங்குவது குறித்து ஆலோசிக்கப்படுமென லேபர் கட்சி அறிவித்திருந்தது.
எனினும் அண்மையில் கூடிய லேபர் கட்சியின் உயர்மட்டக்கூட்டத்தின் முடிவில் இச்சட்டமுன்வடிவிற்கு ஆதரவு வழங்குவதில்லை எனத் தீர்மானிக்கப்பட்டதாக லேபர் கட்சி அறிவித்திருந்தது.
Permanent Residency எனப்படும் நிரந்தர வதிவிட உரிமை பெற்றபின்னர், ஒரு ஆண்டு நாட்டில் வாழ்ந்தால் அவர்கள் குடியுரிமை பெற தகுதி பெறுவர் எனும் தற்போதைய நிபந்தனையை மாற்றி, ஒருவர் வதிவிட உரிமையுடன் 4 ஆண்டுகள் நாட்டில் வாழ்ந்திருந்தால் மட்டுமே குடியுரிமை பெற முடியும் என்பதுடன், ஆங்கிலப்புலமையை நிரூபித்தல், பிற சமூகத்தோடு இணைந்து வாழப் பழகியிருத்தல், ஆஸ்திரேலிய விழுமியங்களை ஏற்றல் போன்ற பல புதிய நிபந்தனைகள் தற்போது அரசு முன்வைக்கும் குடியுரிமைச் சட்ட முன்வடிவில் இடம் பெற்றுள்ளன.
இவற்றில் ஆங்கிலப்புலமையை நிரூபிப்பதற்கு விதிக்கப்பட்டுள்ள உயர் வரையறை ஏற்றுக்கொள்ளமுடியாத ஒன்று என்பதுடன் PR பெற்ற ஒருவர் குடியுரிமைபெறுவதற்கு 4 வருடங்கள் காத்திருக்க வேண்டும் என்பதும் நியாயமற்ற அம்சம் என சுட்டிக்காட்டியுள்ள லேபர் கட்சி, குறித்த சட்டமுன்வடிவிற்கெதிரான கையெழுத்து வேட்டையில் இறங்கியுள்ளது.
