நாடாளுமன்றத்தில் அரசு முன்வைக்கும் குடியுரிமை – Citizenship தொடர்பான புதிய சட்ட முன்வடிவில், குடிவரவு அமைச்சர் Peter Dutton-க்கு மேலதிக அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
இதன்படி Tribunal எனப்படும் தீர்ப்பாயத்தின் முடிவுடன் உடன்படவில்லையாயின், அந்த முடிவினை மாற்றியமைக்கும் அதிகாரம் குடிவரவு அமைச்சருக்கு வழங்கப்படவுள்ளது.
ஏற்கனவே சில விசா விடயங்களில் Administrative Appeals Tribunal (AAT)-இன் முடிவினை மாற்றியமைக்கும் அதிகாரம், அமைச்சர் Peter Dutton-க்கு வழங்கப்பட்டுள்ள நிலையில், இவ்வதிகாரம் குடியுரிமை விவகாரத்திலும் வழங்கப்படவுள்ளது.
குறித்த சட்டமுன்வடிவு நாடாளுமன்றில் அறிமுகப்படுத்தப்பட்டு செனற் அவையின் ஒப்புதலைப்பெறவேண்டிய பின்னணியில், இப்படியான அதிகாரம் தமக்கு வழங்கப்படவேண்டியது அவசியம் என குடிவரவு அமைச்சர் Peter Dutton கூறியுள்ளார்.
Permanent residency எனப்படும் நிரந்தர வதிவிட உரிமை பெற்றபின்னர், ஒரு ஆண்டு நாட்டில் வாழ்ந்தால் அவர்கள் குடியுரிமை பெற தகுதி பெறுவர் எனும் தற்போதைய நிபந்தனையை மாற்றி, ஒருவர் வதிவிட உரிமையுடன் நான்கு ஆண்டுகள் நாட்டில் வாழ்ந்திருந்தால் மட்டுமே குடியுரிமை பெற முடியும் என்பதுடன், ஆங்கிலப்புலமையை நிரூபித்தல், பிற சமூகத்தோடு இணைந்து வாழப் பழகியிருத்தல், ஆஸ்திரேலிய விழுமியங்களை ஏற்றல் போன்ற பல புதிய நிபந்தனைகள் தற்போது அரசு முன்வைக்கும் குடியுரிமைச் சட்ட முன்வடிவில் இடம் பெற்றுள்ளன.
Share
