இந்தியாவில் பஞ்சாப் மாநிலத்தில் விடுமுறைக்காக சென்றிருந்தபோது கடத்திச்சென்று படுகொலைசெய்யப்பட்ட ஆஸ்திரேலிய பிரஜையான கர்ப்பிணிப்பெண் Ravneet Kaur-இன் மரணம் தொடர்பாக ஆஸ்திரேலியாவிலிலுள்ள அவரது கணவர் Jaspreet Singh மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ள இந்திய பொலீஸார், விசாரணைகளை நடத்துவதற்கு அவரை இந்தியாவுக்கு நாடு கடத்துமாறு ஆஸ்திரேலிய அரசுத்தரப்பினரிடம் வேண்டுகோள்விடுத்துள்ளனர்.
Jaspreet Singh-இன் காதலி என்று கூறப்படும் கிரன் என்ற பெண்ணுக்கு குறிப்பிட்ட சம்பவத்தில் நெருங்கிய தொடர்பிருப்பதாகவும், இந்தியா சென்றிருந்த கிரன், படுகொலை சம்பவம் இடம்பெற்ற அடுத்த நாளே இந்தியாவிலிருந்து ஆஸ்திரேலியா திரும்பியிருப்பதாகவும், இருவரையும் கைது செய்து விசாரிக்கவேண்டியது இந்த வழக்கில் அத்தியாவசியமானது என்றும் பஞ்சாப் பொலீஸார் தெரிவித்துள்ளனர்.
படுகொலையை திட்டமிட்டு நடத்தியதாக கூறப்படும் கிரன் என்ற பெண்தான் சம்பவம் இடம்பெற்ற அன்று காணொளியில் கணவரோடு பேசிக்கொண்டிருந்த Ravneet Kaur-ஐ காரில் கடத்திச்சென்று கழுத்தை நெரித்துக்கொலை செய்திருக்கிறார் என்றும் பொலீஸார் கூறியுள்ளார்கள்.
இந்தப்படுகொலை சம்பவத்தில் நேரடித்தொடர்புடைய இன்னொருவர் பஞ்சாப்பில் பொலீஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவரிடம் மேற்கொண்ட விசாரணையில்தான் Ravneet Kaur சுயநினைவு இழக்கச்செய்யப்பட்டு கழுத்து நெரித்துக்கொலைசெய்யப்பட்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
படுகொலைசெய்யப்பட்ட Ravneet Kaur-ஐ ஆறொன்றில் கொண்டுபோய் எறிந்தவர் கிரனின் சகோதரி என்றும் தெரிவிக்கப்படுகிறது.
தமது மகள் காணாமல்போன மாத்திரத்திலேயே அவரது கணவரான Jaspreet Singh-இற்கு அறிவித்து உடனடியாக இந்தியாவுக்கு வருமாறு தாங்கள் அழைத்ததாகவும் ஆனால் அவர் வருவதற்கு மறுத்துவிட்டதாகவும் Ravneet Kaur-இன் பெற்றோர் தெரிவித்துள்ளனர்.
