பாரவூர்தி ஒன்றை முந்துவதற்கு முயற்சித்தபோது எதிரே வந்துகொண்டிருந்த இன்னொரு பாரவூர்தியுடன் மோதுண்டதில் வாகனத்தை ஓட்டிச்சென்ற தாயொருவரும் அவரது 4 பிள்ளைகளும் உயிரிழந்த பரிதாபகரமான சம்பவம் ஒன்று நேற்று முன்னிரவு குயின்ஸ்லாந்தில் இடம்பெற்றுள்ளது.
Kumbia பிரதேசத்தின் Mannuem பகுதியில் Bunya நெடுஞ்சாலையில் நேற்று முன்னிரவு 7.30 மணியளவில் இந்தச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பாக பொலீஸார் கூறும்போது பாரவூர்தியை முந்தியபோதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது என்றும் எதிரே வந்துகொண்டிருந்த பாரவூர்தி விபத்துக்குள்ளான வாகனத்தின் மீது வீழ்ந்து பற்றி எரிந்திருக்கிறது என்றும் தெரிவித்துள்ளார்கள்.
சம்பவத்தில் வாகனத்தை ஓட்டிச்சென்ற 35 வயதான தாயாரும் வாகனத்திலிருந்த அவரது பத்து வயதுக்கு உட்பட்ட மூன்று பிள்ளைகளும் அந்த இடத்திலேயே பலியாகியுள்ளனர். வாகனத்திலிருந்த மற்றொரு மகள் விபத்திலிருந்து மீட்கப்பட்டு படுகாயங்களுடன் குயின்ஸ்லாந்து Kingaroy வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டு அங்கிருந்து வான் வழியாக குயின்ஸ்லாந்து குழந்தைகள் வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுக்கொண்டிருக்கும்போது விமானத்தில் மரணமடைந்தார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவ இடத்துக்கு விரைந்துள்ள பொலீஸார் மற்றும் அவசர சேவைகள் பிரிவினர் நெடுஞ்சாலையை முழுவதுமாக போக்குவரத்துக்கு தடைசெய்துவிட்டு மீட்புப்பணிகளில் ஈடுபட்டிருக்கிறார்கள். குயின்ஸ்லாந்தில் இடம்பெற்ற கொடூரமான விபத்துக்களில் இதுவொன்று என்று பொலீஸார் கூறியுள்ளனர்.
