குயின்ஸ்லாந்திலிருந்து படகு மூலம் பிலிப்பீன்ஸிற்கு சென்று அந்நாட்டு அரசை கவிழ்ப்பதற்கு சதித்திட்டம் தீட்டிய குழுவின் தலைவர் என்று கருதப்படும் மெல்பேர்ன் நபருக்கு உச்ச நீதிமன்றம் 7 வருட சிறைத்தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது.
ஐஎஸ் அமைப்பால் கவரப்பட்ட Robert 'Musa' Cerantonio என்ற நபர் 2016 ஆம் ஆண்டு காலப்பகுதியில் தன்னுடன் சேர்த்து மேலும் ஐந்துபேரை இணைத்துக்கொண்டு ‘tinnie terror’ என்றழைக்கப்படும் இந்த திட்டத்தை நிறைவேற்றவிருந்தார் என குற்றஞ்சாட்டப்பட்டு குறித்த 6 பேரும் கைது செய்யப்பட்டிருந்தார்கள்.
குயின்ஸ்லாந்து கடற்கரையிலிருந்து பிலிப்பீன்ஸிற்கு செல்வதற்கு ஏழு மீற்றர் நீளமாக மீன்பிடிப்படகு ஒன்றை வாங்கி அதில் ஆறுபேரும் அந்நாட்டுக்கு சென்று வன்முறையின் ஊடாகவோ அல்லது வேறு வழியிலோ அரசை கவிழ்த்து அங்கு ஷரிய சட்டத்தின் கீழான இஸ்லாமிய அரசை நிறுவுவதற்கு திட்டமிட்டார்கள் என்று குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டிருந்தது.
இந்தக்குற்றச்சாட்டுடன் தொடர்புடைய ஏனையோருக்கு ஏற்கனவே நான்கு வருடங்கள் வரையிலான சிறைத்தண்டனை தீர்ப்பு வழங்கப்பட்டுவிட்டது.
நேற்றைய தினம், இந்தக்கூட்டத்தின் தலைவர் எனப்படுபவருக்கு எதிரான தண்டனை வழங்கும் அமர்வு உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்றது.
சிறைவைக்கப்பட்ட கடந்த மூன்று வருட காலப்பகுதியில் Robert 'Musa' Cerantonio தனது இஸ்லாமிய தீவிரவாத சிந்தனைகளை கைவிட்டுவிட்டார் என்று அவர் தரப்பில் முன்னிலையான சட்டத்தரணி தெரிவித்தபோதும், Robert 'Musa' Cerantonio ஏனைய நபர்களை மனம் மாற்றி தீவிரவாதப்போக்கில் தூண்டியிருக்கிறார் என்று கூறி மொத்தமாக ஏழு வருட சிறைத்தண்டனையை தனது தீர்ப்பில் அறிவித்த நீதிபதி, பரோலில் வருவதற்கான தகுதிக்காலத்தை ஐந்துவருடங்கள் மூன்று மாதங்களாக குறிப்பிட்டிருந்தார்.
Robert 'Musa' Cerantonio ஏற்கனவே 3 ஆண்டுகளைச் சிறையில் கழித்துவிட்டார் என்பதால் எதிர்வரும் 2021ம் ஆண்டு இவர் பரோலில் வெளிவருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
