ஆஸ்திரேலியாவின் பிராந்திய விமானநிலையமொன்றின் பாதுகாப்பு நடவடிக்கைகளை சோதனை செய்வதற்காக ஆஸ்திரேலிய அரசின் உள்துறை அமைச்சின் விசேட அதிகாரிகள் மேற்கொண்ட இரகசிய நடவடிக்கையின்போது போலி வெடிகுண்டினை பாதுகாப்பு அதிகாரிகள் சோதனை செய்யாமல்விட்டிருப்பது தெரியவந்திருக்கிறது.
இந்த அதிர்ச்சிகரமான சம்பவம் கடந்த மாதம் குயின்ஸ்லாந்தில் உள்ள Townsville விமானநிலையத்தில் இடம்பெற்றிருப்பதாக சனல் 9 செய்தி தெரிவிக்கிறது.
இதுபோன்றதொரு சம்பவம் கடந்த ஏப்ரல் மாதமும் இடம்பெற்று குறிப்பிட்ட சோதனை நடவடிக்கையில் அசமந்தமாக செயற்பட்ட தனியார் பாதுகாப்பு நிறுவனத்தின் இரண்டு உத்தியோகத்தர்கள் வேலையிலிருந்து இடைநிறுத்தப்பட்டிருந்த நிலையில் இன்னொரு சம்பவமும் இடம்பெற்றிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
ஆஸ்திரேலியாவிலுள்ள சுமார் 64 பிராந்திய விமானநிலையங்களின் பாதுகாப்பை உயர்த்துவதற்காக கடந்த வருடம் அரசு 5 கோடி டொலர்களை ஒதுக்கியிருந்தது.
இந்த விமானநிலையங்களின் பாதுகாப்பு சோதனைகள் தனியார் பாதுகாப்பு நிறுவனத்திடம் வழங்கப்பட்டுள்ள நிலையில், அவர்களது பணியை சோதனை செய்வதற்காக அரசு தரப்பிலிருந்து விசேட அதிகாரிகள் இரகசிய நடவடிக்கைகளில் ஈடுபடுவது வழக்கம்.
இவ்வாறான ஒரு நடவடிக்கையின்போதே Townsville விமானநிலையத்தில் மேற்படி சம்பவம் இடம்பெற்றிருக்கிறது.
Townsville விமானநிலையத்தில் சோதனை நடவடிக்கைகளில் ஈடுபடுகின்ற தனியார் பாதுகாப்பு நிறுவனமே Brisbane, Melbourne, Perth, Gold Coast விமானநிலையங்களிலும் Launceston, Mackay, Emerald, Mt Isa, Alice Springs, Rockhampton, Longreach, Archerfield, Cobham ஆகிய பிராந்திய விமானநிலையங்களிலும் சோதனை நடவடிக்கைளை மேற்கொண்டுவருவது குறிப்பிடத்தக்கது.
