SKIP TO MAIN CONTENT

கன்பராவில் அகதிகளிடம் விசா மோசடி! போலீஸார் விசாரணை!!

One of the fake visas
One of the fake visas Source: SBS

1 min read

Published

Presented by Renuka


Skip to article content

ஆஸ்திரேலியாவிலிருந்து பங்களாதேஷ் செல்வதற்காக விசாவுக்கு விண்ணப்பித்த ரோஹிங்யா அகதிகள் பலரிடம் கன்பரா தூதரகத்தில் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படும் மோசடி குறித்து ஆஸ்திரேலிய பொலீஸார் விசாரணை மேற்கொண்டுவருகிறார்கள்.

பங்களாதேஷ் செல்வதற்காக கன்பராவிலுள்ள பங்களாதேஷ் தூதரகத்தில் தாக்கல் செய்யப்பட்ட சுற்றுலா விசா விண்ணப்பங்களிலேயே இவ்வாறான பெரும் மோசடி இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

விசா விண்ணப்பிக்கும் முறையில் காணப்படுகின்ற குழப்பமான படிமுறைகளினாலும் மொழிப்பிரச்சினையாலும் மூன்றாம் நபரை நாடவேண்டிய கட்டாயத்துக்குள்ளான அப்பாவி ரோஹிங்யா அகதிகளே இந்த மோசடியில் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுவரை இந்த மோசடியினால் பாதிக்கப்பட்ட சுமார் 20 ரோஹிங்யா அகதிகள் பொலீஸில் மேற்கொண்ட முறைப்பாடுகளின் மீது விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.

கடந்த கிறிஸ்மஸ் விடுமுறை காலப்பகுதியில் பங்களாதேஷிற்கு ரோஹிங்யா அகதிகள் பயணம் மேற்கொண்டிருந்த நிலையில் அந்நாட்டு விமானநிலைய அதிகாரிகள் போலி விசாவைக் கண்டுபிடித்து விசாரணை செய்தபோது இவ்விடயம் அம்பலமானது என்றும் கன்பராவிலுள்ள பங்களாதேஷ் தூதரகத்திலுள்ள உத்தியோகத்தர் ஒருவரின் ஊடாகவே இந்த விசா மோசடி இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

பங்களாதேஷ் பொலீஸாரும் இந்த விவகாரம் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டுவரும் இந்நிலையில் தமது தூதரக அதிகாரிகள் எவரும் மோசடிச்செயல்களில் ஈடுபட்டார்கள் என்று இப்போதைக்கு திட்டவட்டமாக கூறமுடியாது என்று கன்பராவிலுள்ள பங்களாதேஷ் தூதுவர் தெரிவித்துள்ளார்.


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now