மேற்கு ஆஸ்திரேலியாவில் கணவனைக் கொன்ற குற்றத்திற்காக சிறைத் தண்டனை அனுபவித்துவரும் இலங்கைப்பின்னணி கொண்ட சிங்கள மருத்துவர் சாமரி லியனகே, வெளியில் வந்தபின்னர், நாடு கடத்தப்படமாட்டார் எனவும், தொடர்ந்தும் ஆஸ்திரேலியாவில் தங்கியிருப்பதற்கான அனுமதியை குடிவரவுத் திணைக்களம் வழங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
மருத்துவர் சாமரி லியனகே சுமார் 5 ஆண்டுகளுக்கும் மேலாக பாலியல் துன்புறுத்தல்கள் உட்பட பல்வேறு வழிகளில் சித்திரவதை செய்த கணவனை, கடந்த 2014ம் ஆண்டு ஜுன் மாதம் Geraldtonஇல் உள்ள அவர்களது இல்லத்தில் வைத்து சுத்தியலால் அடித்துக்கொன்றிருந்தார்.
சாமரி லியனகேயின் கணவர் டினேந்திரா அத்துகோரளையும் ஒரு மருத்துவர் ஆவார்.
இதேவேளை குடும்பவன்முறைக்குள்ளானவர் என்பதால் இக்கொலைக்கான குறைந்தபட்ச தண்டனையாக, 4 வருட சிறைத்தண்டனை அனுபவித்துவரும் சாமரி லியனகே, பரோலில் வெளியே வருவதற்கான மனு, அடுத்த மாதம் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
ஆனால் சாமரி லியனகேயின் விசா ரத்துச் செய்யப்பட்டிருந்ததால், அவர் வெளியே வந்ததும் இலங்கைக்கு நாடு கடத்தப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டது.
எனினும் தனது பாதுகாப்பு மற்றும் குடும்பத்தின் நலனைக் கருத்திற்கொண்டு, தன்னை நாடு கடத்த வேண்டாம் என குடிவரவுத் திணைக்களத்திடம் சாமரி லியனகே கோரிக்கை விடுத்ததையடுத்து, இதை ஏற்றுக்கொண்ட குடிவரவுத்திணைக்களம் அவரது விசாவை மீண்டும் வழங்க இணங்கியுள்ளது.
