இங்கிலாந்திலிருந்து கப்டன் ஜேம்ஸ் குக் முதன்முதலாக ஆஸ்திரேலியாவுக்கு பயணப்பட்டு வந்திறங்கிய காலப்பகுதியின் 250 ஆவது ஆண்டு நிறைவு அடுத்தவருடமாகும்.
இந்த 250 ஆவது ஆண்டை கொண்டாடும்வகையில் ஆஸ்திரேலியாவை சுற்றி கப்பலில் வலம் வருகின்ற நினைவு நிகழ்வொன்றுக்கு Scott Morrison அரசு ஒழுங்கு செய்துள்ளது. இதற்கென கப்டன் குக் பயணம் செய்த கப்பலின் மாதிரி பயன்படுத்தப்படவுள்ளநிலையில் இதற்குரிய செலவாக 6.7 மில்லியன் டொலர்களை Australian National Maritime Museum-க்கு அரசு வழங்கியுள்ளது. .
இந்த கடல் வழிப்பயணம் அடுத்தவருடம் - 2020 ஆம் ஆண்டு - மார்ச் மாதம் சிட்னியிலிருந்து புறப்பட்டு ஆஸ்திரேலியாவை சுற்றி வந்து தஸ்மேனியாவில் ஹோபார்ட்டை வந்தடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சுற்றுப்பயணத்தில் கலந்துகொள்ளவுள்ள கடற்கலங்கள் நாடு முழுவதிலுமுள்ள 39 இடங்களில் தரித்து அங்கு நடைபெறும் கோலாகலமான நிகழ்வுகளில் கலந்துகொண்டுவிட்டு பயணத்தை தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் கோலாகலமாக நடைபெறவுள்ள இந்த நிகழ்வுகளுக்கு சுமார் 50 மில்லியன் டொலர்கள்வரை ஒதுக்கீடு செய்துள்ள அரசு இந்த நிதியை அனைத்து மாநிலங்களுக்கும் பகிர்ந்தளிக்கவுள்ளதாக கூறியுள்ளது.
இந்த நிகழ்வுகள் கப்டன் குக் மேற்கொண்ட வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தரையிறக்கத்தையும் அதன் வழியான நல்லிணக்கம் மற்றும் கண்டுபிடிப்புக்களையும் அடுத்த தலைமுறைகளுக்கு எடுத்துச்சொல்லும் என்று பிரதமர் Scott Morrison நம்பிக்கை வெளியிட்டுள்ளனார்.
ஆனால் கப்டன் குக் ஆஸ்திரேலியாவின் கிழக்குக்கரை உட்பட சில பகுதிகளூடாக மாத்திரமே பயணம் செய்திருந்தார் என்று சுட்டிக்காட்டியுள்ள எதிர்கட்சித் தலைலவர் Bill Shorten, ஆஸ்திரேலிய அரசு வரலாற்றை தவறாக விளக்க முனைவதாக குற்றம்சாட்டியுள்ள அதேநேரம் இவ்வாறான கப்பல் ஆஸ்திரேலியாவைச் சுற்றிப் பயணப்பட வேண்டுமென்று எவரும் கேட்கவில்லை என்றும் சுகாதார திட்டங்களுக்கான நிதிஒதுக்கீட்டைவிட இந்தவிடயத்திற்கு அரசு முக்கியத்துவம் கொடுத்துள்ளதாகவும் குற்றம்சாட்டினார்.
கப்டன் குக் நியூசிலாந்து முழுவதையும் சுற்றிப்பயணப்பட்ட அதேநேரம் Matthew Flinders என்பவர் முதன்முதலாக 1801-1803 காலப்பகுதியில் கடல்வழியாக ஆஸ்திரேலியா முழுவதையும் சுற்றிப்பயணப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
