நாளை மே 18ம் திகதி ஆஸ்திரேலிய தேர்தல் நடைபெறவுள்ளநிலையில், தேர்தலுக்கு முந்தைய இறுதி கருத்துக்கணிப்பில் இருகட்சி விருப்பு அடிப்படையில் லேபர் கட்சி 51-49 என முன்னிலை வகிக்கின்றது.
நேற்று வெளியான Ipsos கருத்துக்கணிப்பு முடிவின்படி லேபர்கட்சி முன்னிலை வகித்தாலும், இம்மாத ஆரம்பத்தில் வெளியான கருத்துக்கணிப்புடன் ஒப்பிடுகின்றபோது ஆளும் கூட்டணி அரசு ஒரு புள்ளியால் முன்னேறியுள்ள அதேநேரம் லேபர் கட்சி ஒரு புள்ளியால் பின்தள்ளப்பட்டுள்ளது.
இதேவேளை கூட்டணி அரசின் முதன்மை வாக்குகளும் 36 வீதத்திலிருந்து 39 வீதமாக அதிகரித்துள்ளது.
லேபர் கட்சியின் முதன்மை வாக்குகள் கடந்த கருத்துக்கணிப்பில் காணப்பட்டதுபோல 33 வீதமாகவே தொடர்ந்தும் காணப்படுகின்றது.
கிரீன்ஸ் கட்சியின் முதன்மை வாக்குகள் 13 வீதமாக காணப்படுகின்றது.
மக்களின் விருப்பத்துக்குரிய பிரதமராக Scott Morrison அவர்கள் எதிர்கட்சித்தலைவர் Bill Shorten-ஐ விடவும் 47-40 என தொடர்ந்தும் முன்னிலை வகிக்கிறார்.
இந்நிலையில் நாளை நடைபெறவுள்ள தேர்தல் தொடர்பில் தமிழ் வாக்காளர்கள் சிலர் என்ன கருதுகிறார்கள் என்பது தொடர்பிலும் அவர்களது வாக்கு யாருக்கு என்பது தொடர்பிலும் கூறிய கருத்துக்களின் தொகுப்பு இது:
இதேவேளை SBS செய்திக்காக மேற்கொள்ளப்பட்ட Essential Research கருத்துக்கணிப்பு முடிவுகளின்படி 71 வீதமான ஆஸ்திரேலியர்கள் நாடாளுமன்றில் பல்கலாச்சார பின்னணிகொண்டவர்களும் அங்கம் வகிக்கவேண்டுமென விரும்புகிறார்கள்.
46 வீதமானவர்கள், அதிகளவிலான பெண் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவாகவேண்டும் என விரும்புகின்ற அதேநேரம் 40 வீதமானவர்கள், இளைஞர்கள் நாடாளுமன்றம் செல்ல வேண்டுமென விரும்புகின்றனர்.
இக்கருத்துக்கணிப்பில் பங்கேற்ற கால்வாசிப்பேர் பூர்வகுடியினரையும் மாற்றுத்திறனாளிகளையும் பிரதிநிதித்துவம் செய்யும்வகையில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவுசெய்யப்பட வேண்டுமென குறிப்பிட்டுள்ளனர்.
17 வீதமானவர்கள் புலம்பெயர் பின்னணிகொண்டவர்கள் மற்றும் ஓரினச் சேர்க்கை சமூகத்தை பிரதிநிதித்துவம் செய்யும் வகையிலும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவுசெய்யப்படவேண்டுமென விரும்புகின்றனர்.
