போதையில் விமானத்தை ஓட்டுவதற்கு தயாராகவிருந்த சிங்கப்பூர் எயார்லைன்ஸ் விமான ஓட்டி ஒருவர் மெல்பேர்ன் விமானநிலையத்தில் வைத்து கடைசி நேரத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் கடந்த சனிக்கிழமை மெல்பேர்ன் விமானநிலையத்தில் இடம்பெற்றுள்ளது.
மெல்பேர்னிலிருந்து நியூசிலாந்தின் வெலிங்டன் விமான நிலையத்துக்கு பயணமாகவிருந்த விமானத்தை ஓட்டவிருந்த விமான ஓட்டியே இவ்வாறு கண்டுபிடிக்கப்பட்டவர் ஆவார்.
அன்றையதினம் தனது பறப்பு நடவடிக்கையை மேற்கொள்வதற்காக சிங்கப்பூரிலிருந்து இரண்டு நாட்களுக்கு முன்னரே மெல்பேர்ன் வந்திருந்த குறிப்பிட்ட விமான ஓட்டி மெல்பேர்னில் தங்கியிருந்தபோது போதைக்குள்ளாகியிருக்கிறார் என்று சந்தேகிக்கப்படுகிறது.
மெல்பேர்ன் நேரம்படி சனிக்கிழமை காலை புறப்பட்டு அதேதினம் மாலை நியூஸிலாந்திலிருந்து திரும்பவேண்டிய விமானத்தினை ஓட்டுவதற்காக வழக்கமான விமான ஓட்டிகளுக்கான சோதனைகளுக்கு உள்ளானபோது குறிப்பிட்ட விமான ஓட்டி பறப்பு நடவடிக்கைக்கான தகுதியை பெற்றுக்கொள்ள முடியாதளவுக்கு போதையிலிருந்தமை கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.
விமான சேவைகள் பாதுகாப்பு பிரிவு உடனடியாகவே இவரது பணியை இடைநிறுத்தி சிங்கப்பூர் எயார் லைன்ஸ் நிறுவனத்துக்கு அறிவித்ததது. இதையடுத்து இவர் மீதான விசாரணைகளை மேற்கொள்வதற்காக இவரது பணியை இடைநிறுத்திவிட்டு உடனடியாக சிஙக்பூருக்கு அழைத்திருக்கிறது சிங்கப்பூர் எயார்லைன்ஸ் தலைமையகம்.