தனிப்பட்டவர்களின் கணனிகள் மற்றும் கைத்தொலைபேசிகளின் கடவுச்சொற்களை விசாரணைகளின்பாது வெளிப்படுத்தக்கோரும் சட்டம் ஆஸ்திரேலியாவில் அறிமுகமாகவுள்ளது.
அவற்றை வெளிப்படுத்த தவறினால் ஐந்து வருட சிறை மற்றும் 60,000 டொலர்கள் வரை அபராதமும் கிடைக்கப்பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
உள்துறை அமைச்சர் Peter Dutton ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் கொண்டுவந்திருக்கும் இந்த சட்டமூலம் மூன்று வாசிப்புக்களின் ஊடாக நிறைவேற்ற வேண்டியதாக உள்ளது. தற்போது இரண்டாவது வாசிப்பு நடைபெற்றுவருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பிட்ட சட்டமூலத்துக்கு எதிராக முக்கியமாக தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தங்களது எதிர்ப்பை பதிவு செய்திருக்கின்றன.
ஆனால் "நாட்டின் பாதுகாப்பு கருதி அரசாங்கம் கொண்டுவரும் சட்டத்திற்கு மதிப்பளித்து அதன் வழி ஒத்துழைப்பது நாட்டு மக்களின் கடமை. அந்த நடைமுறையை எதிர்த்து முரண்டு பிடிப்பவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். தண்டனை வழங்கப்படும். அந்த படிமுறையின் அடிப்படையிலேயே தற்போதைய சட்டமும் அதற்கான தண்டனையும் அறிவிக்கப்படுகிறது. நாட்டின் பாதுகாப்பை உறுதிசெய்யவேண்டிய தரப்பினருக்கு தெரியாமல் இரகசியமான குற்றங்களை இழைப்பவர்களிடம் விசாரணைகளை மேற்கொள்ளும்போது அதற்கு அவர்களை ஒத்துழைக்காவிடின் தண்டனைகள் கடினமாகவேண்டும்" என்று Peter Dutton தெரிவித்துள்ளார்.
கடவுச்சொற்களை வெளிப்படுத்தக்கோரும் சட்டம் தனிநபர்களுக்கு மாத்திரமல்லாமல் நிறுவனங்களுக்கு எதிராகவும் பயன்படுத்தப்படும் என்றும், பாதுகாப்பு தரப்பினர் முன்வைக்கும் கோரிக்கைகளுக்கு ஏற்ப தொலைத்தொடர்பு நிறுவனங்கள் மற்றும் தொழில்நட்ப ஸ்தாபனங்கள் தங்கள் இரகசிய ஆவணங்களை அரசாங்கத்தோடு பகிர்ந்துகொள்ளவேண்டும். இந்தக்கோரிக்கையை மறுப்பவர்கள் யாராக இருப்பினும் அவர்களுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
