கீழடி அகழ்வாராய்ச்சி சிட்னியில் நிழற்படக் கண்காட்சியாக
கீழடி, தமிழ்நாட்டின் மதுரை நகருக்கு அருகே உள்ள ஒரு சிறிய கிராமம். இந்திய தொல்லியல் ஆய்வுக் கழகம் (ASI), அந்த இடத்தில் செய்த அகழ்வாராய்ச்சியில் கிமு 2ம் நூற்றாண்டில் பயன்படுத்தப்பட்ட பொருட்கள் மட்டுமல்ல ஒரு முழு நத்தம் (வாழ்விடம்) கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சங்க கால இலக்கியத்தில் கூறப்பட்டுள்ளது போல் அன்றைய வாழ்க்கை முறை அமைந்திருந்தது என்பதை துல்லியமாகக் காட்டும் இந்த அகழாய்வில், ரோமானிய கலைப்பொருட்கள், ரோமானியர்களுக்கும் பாண்டிய அரசுக்குமிடையில் உள்ள பண்டைய வர்த்தக உறவுகள், பொது மக்கள் உபயோகித்த பொருட்கள், கருவிகள் என்பனவும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
கடந்த வார இறுதியில் சிட்னி நகரில், கீழடி தொல்பொருளியல் தளத்தில் இருந்து பெறப்பட்ட பொருட்கள், இடங்கள், கிராம அமைப்பு என்பவற்றை சித்தரிக்கும் ஒரு நிழற்படக் கண்காட்சி நடத்தப்பட்டது. தமிழ் எழுத்தாளர், சமூக ஆர்வலர் மற்றும் பசுமை நடை என்ற (புறக்கணிக்கப்பட்ட நினைவுச்சின்னங்களைப் பற்றித் தொடர்ந்து கற்றுக் கொள்ளும் ஒரு முறைசாரா குழு) அமைப்பின் நிறுவனர் அ.முத்துக்கிருஷ்ணன், இந்த அகழ்வாய்வுக் கண்டுபிடிப்பின் முக்கியத்துவத்தை விளக்கியது மட்டுமன்றி, ஒவ்வொரு நிழற்படத்தில் என்ன காண்பிக்கப்பட்டது என்பதையும் தெளிவாக விளக்கினார்.
இந்நிகழ்வை SBS தமிழ் ஒலிபரப்பு ஆவணப்படுத்தியுள்ளது.