நியூ சவுத் வேல்ஸ் மற்றும் விக்டோரியா மாநிலங்களில் கொரோனா பரவலைத் தடுப்பதற்கான விதிகளை மீறிய பலருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக விக்டோரியாவில் 14 நாட்கள் தனிமைப்படுத்தல் விதி மற்றும் இரண்டு பேருக்கு மேல் ஒன்றுகூடுதல் விதிகளை மீறிய ஆகக்குறைந்தது எட்டுப் பேருக்கு அபராதம் விதிக்கப்பட்ட அதேநேரம் சமூக இடைவெளி பேணப்படாத குற்றத்துக்காக Fitzroy-இல் உள்ள உணவகம் ஒன்று பத்தாயிரம் டொலர்கள் வரை அபராதம் செலுத்த நேரிட்டுள்ளது.
இதேபோன்று நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் கொரோனா பரவல் தடுப்பு விதிகளை மீறிய 13 பேருக்கு தண்டம் விதிக்கப்பட்டதாக அம்மாநில பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நேற்று செவ்வாய்க்கிழமை நடைமுறைக்கு வந்துள்ள Stage-3 Shutdown விதிகளின்படி, வீட்டிலுள்ள அங்கத்தவர்கள் தவிர, அனைத்து உள்ளக மற்றும் வெளிப்புற ஒன்றுகூடல்களில் கலந்துகொள்பவர்களின் எண்ணிக்கை அதிகபட்சம் இரண்டாக குறைக்கப்பட்டுள்ளது.
ஒரே வீட்டில் வசிப்பவர்கள் ஒன்றாக வெளியில் செல்லுதல், 10 பேருடனான இறுதிநிகழ்வு, 5 பேருடனான திருமண நிகழ்வு, குடும்ப units போன்றவற்றுக்கு இக்கட்டுப்பாட்டிலிருந்து விதிவிலக்கு உண்டு.
அதேநேரம் உணவு, மருத்துவ மற்றும் அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்கு, ஒன்றுகூடல் விதிமுறைகளுக்கு உட்பட்ட உடற்பயிற்சி, வேலை மற்றும் கல்வி கற்பதற்காக செல்லுதல் போன்ற காரணங்களைத் தவிர மற்றைய அனைத்துநேரங்களிலும் அனைவரும் வீட்டில் இருக்க வேண்டும்.
இந்தப்பின்னணியில் நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் அத்தியாவசிய காரணங்களன்றி வீட்டைவிட்டு வெளியே செல்பவர்களுக்கு 6 மாத சிறைத்தண்டனை அல்லது 11 ஆயிரம் டொலர்கள் வரை அபராதம் விதிக்கப்படலாம்.
இதுதவிர நாட்டின் ஏனைய பகுதிகளில் பொதுமக்கள் ஒன்றுகூடல் விதியை மீறுவோருக்கு என்ன தண்டனை விதிக்கப்படும் என்ற விபரம் கீழே தரப்பட்டுள்ளது.
- விக்டோரியா- 1600 டொலர்கள் அபராதம் அல்லது அதற்கும் மேல்.
- ACT- எச்சரிக்கை விடுக்கப்படுவதைத் தொடர்ந்து 8000 டொலர்கள் வரை அபராதம்.
- குயின்ஸ்லாந்து- தனிநபர்களுக்கு 1330 டொலர்கள் வரை அபராதம்.
- மேற்கு ஆஸ்திரேலியா- தனிநபர்களுக்கு 1000 டொலர்கள் வரை அபராதம்.
- Tasmania-அபராதம் விதிக்கும் அதிகாரம் பொலிஸாருக்கு உண்டு.
- தெற்கு ஆஸ்திரேலியா- தேசிய கட்டுப்பாட்டை பொலிஸார் நடைமுறைப்படுத்தவில்லை.
- Northern Territory- தேசிய கட்டுப்பாட்டை பொலிஸார் நடைமுறைப்படுத்தவில்லை.
