கிறிஸ்மஸ் தீவில் பல மாதங்களாக தடுத்துவைக்கப்பட்டுள்ள பிரியா-நடேஸ் குடும்பத்தைப் பார்வையிடுவதற்கான தனது முயற்சியை பாதுகாப்புத்துறை அமைச்சர் பீட்டர் டட்டன் தடுத்துவிட்டதாக லேபர் கட்சியின் உள்துறை விவகாரங்களுக்கான பேச்சாளர் செனட்டர் Kristina Keneally குற்றம்சாட்டியுள்ளார்.
இதையடுத்து தமிழ் குடும்பத்தைப் பார்வையிடுவதற்கு தனது சொந்த செலவில் அவர் கிறிஸ்மஸ் தீவிற்குச் சென்றுள்ளார்.
தகவல் தொடர்பு மற்றும் உட்கட்டமைப்பு விவகாரங்கள் தொடர்பில் ஆராய்வதற்கென, செனட்டர் Kristina Keneally அடங்கிய நாடாளுமன்ற குழு கிறிஸ்மஸ் தீவிற்குச் செல்வதற்குத் திட்டமிட்டிருந்ததுடன் இதற்கான தனி விமானமும் அரச செலவில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்நிலையில் கிறிஸ்மஸ் தீவிலிருக்கும் போது அங்குள்ள தடுப்புமுகாமுக்குச் சென்று பிரியா-நடேஸ் குடும்பத்தைப் பார்வையிடத் திட்டமிட்ட Kristina Keneally, இதற்கான அனுமதியையும் எல்லைப் பாதுகாப்புப் பிரிவினரிடமிருந்து பெற்றிருந்தார்.
ஆனால் இதனை அறிந்த பாதுகாப்புத்துறை அமைச்சர் பீட்டர் டட்டன் நாடாளுமன்ற குழுவுக்கென ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தனி விமானத்தை ரத்துச் செய்துவிட்டதாக Kristina Keneally தெரிவித்துள்ளார்.
இதையடுத்து தனது சொந்தச் செலவில் கிறிஸ்மஸ் தீவிற்கு வந்து குறித்த குடும்பத்தைப் பார்வையிடுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
புகலிடக்கோரிக்கை நிராகரிக்கப்பட்டு நாடுகடத்தலை எதிர்கொண்டுள்ள பிரியா-நடேஸ் குடும்பம் இதற்கெதிராக தமது சட்டப்போராட்டத்தை தொடர்கின்றமை குறிப்பிடத்தக்கது.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.
டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
