ஆஸ்திரேலிய தேர்தலில் லிபரல் கூட்டணி வெற்றிபெற்ற செய்தி வெளியான பின்னர் மனுஸ் தீவில் ஆறு அகதிகள் தற்கொலைக்கு முயற்சித்திருப்பதாக news.com.au தெரிவித்துள்ளது.
லேபர் கட்சி ஆட்சியேறி தங்களது நிலை குறித்து ஆரோக்கியமானதொரு முடிவை அறிவிக்கும் என்று எதிர்பார்த்திருந்த மனுஸ் - நவுறு தீவு அகதிகள் தற்போது வெளியாகியிருக்கும் தேர்தல் முடிவுகளால் மிகவும் மனமுடைந்துபோயுள்ளார்கள் என்று அங்கிருந்து அகதிகள் சார்பில் பேசியவர்கள் கூறியுள்ளார்கள்.
லேபர் கட்சி ஆட்சியைக்கைப்பற்றினால் தங்களை ஆஸ்திரேலியாவுக்குள் அனுமதிக்காவிட்டாலும் பரவாயில்லை. அமெரிக்காவுக்கு அனுப்பி வைப்பதற்கான நடவடிக்கைகளை துரிதப்படுத்தும், 150 அகதிகளை ஏற்றுக்கொள்வதாக அறிவித்துவரும் நியூஸிலாந்து அரசின் கோரிக்கையை ஏற்றுக்கொள்ளும் என்று எதிர்பார்த்திருந்த மனுஸ் - நவுறு தீவு அகதிகள் Morrison அரசின் வெற்றியினால் மிகுந்த விரக்தியடைந்துள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை ஆஸ்திரேலியாவிலுள்ள மக்களின் தேவைகள் - முன்னுரிமைகள் ஆகியவை வேறுபட்டவை என்றாலும் தங்களது நிலை குறித்தும் அவர்கள் சிந்திப்பார்கள் என்று எதிர்பார்த்திருந்ததாகவும் நடைபெற்று முடிந்த தேர்தலை தாங்கள் மிகவும் உன்னிப்பாக அவதானித்து வந்ததாகவும், வெளிவந்துள்ள முடிவுகளால் தங்களது நம்பிக்கை நொருங்கிவிட்டதாகவும் மனுஸ் தீவிலிருந்து SBS Arabic24 சேவையுடன் பேசிய அகதி ஒருவர் கூறியுள்ளார்.
லிபரல் ஆட்சிக்கு ஆதரவு தெரிவித்த மக்களின் முடிவை தாங்கள் மதிப்பதாகவும் ஆட்சிபீடமேறவுள்ள அரசுடன் இணைந்து செயற்பட்டு தங்களுக்கு உரிய தீர்வொன்றை பெற்றுத்தருமாறும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
