தெற்கு ஆஸ்திரேலிய மாநிலத்தில் நடந்துகொண்டிருக்கும் வாக்கு எண்ணிக்கையின் தற்போதைய நிலவரப்படி லேபர் கட்சி குறைந்து 26 இடங்களை பெறும் என்று கணிக்கப்படுகிறது. ஆட்சியமைக்க 24 இடங்களே தேவை என்ற நிலையில் லேபர் கட்சி எளிதாக ஆட்சியைப் பிடித்துள்ளது. கடந்த 2018 தேர்தலில் லேபர்ட் கட்சிக்கு 19 இடங்கள் கிடைத்த நிலையில் தற்போதைய 2022 ஆண்டு தேர்தலில் லேபர் கட்சி மேலும் 6 இடங்களைக் கைப்பற்றி ஆட்சியைப் பிடித்துள்ளது. லிபரல் கட்சி 16 இடங்களை கைப்பற்றும் என்று கணிக்கப்படுகிறது. லிபரல் கட்சி கடந்த 2018 தேர்தலில் 25 இடங்களை கைப்பற்றிஇருந்தது நினைவுகூரத்தக்கது.
லேபர் கட்சித் தலைவர் பீட்டர் மலினௌஸ்காஸ் தெற்கு ஆஸ்திரேலியாவின் 47வது ப்ரீமியராக பதவி ஏற்கவுள்ளார். புதிய ப்ரீமியராக பொறுப்பேற்கவிருக்கும் பீட்டர் மலினௌஸ்காஸ்ஸை தற்போதைய பிரீமியர் ஸ்டீவன் மார்ஷல் தொலைபேசியில் அழைத்து தனது வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.
ஒரு மாநிலத்தில் ஆட்சியைப் பிடிக்கும் ஒரு கட்சி பொதுவாக தொடர்ந்து வரும் அடுத்த தேர்தலில் வெற்றிபெறுவது ஆஸ்திரேலியாவில் நடைமுறை வழக்கம். எனவே தெற்கு ஆஸ்திரேலிய மாநிலத்தில் 2018 ஆம் ஆண்டு ஆட்சியைப் பிடித்த லிபரல் கட்சி இம்முறை வெற்றிபெறும் என்றே எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் லிபரல் கட்சி ஒரு முறை மட்டுமே ஆட்சி நடத்திய நிலையில், நான்கு ஆண்டுகளில் பதவி இழந்துள்ளது.
கோவிட் பரவிய கடந்த இரண்டு ஆண்டுகளில் ஆஸ்திரேலிய மாநிலங்களில் நடந்த தேர்தல்களில் எந்த ஆளும் கட்சியும் தோல்வி கண்டதில்லை. உதாரணமாக குயின்ஸ்லாந்து மற்றும் மேற்கு ஆஸ்திரேலிய மாநிலங்களில் ஆளும் கட்சிகள் தங்கள் கோவிட் பரவலை நல்ல முறையில் கையாண்டதாக பிரச்சாரம் செய்து ஆட்சியை தக்கவைத்துக்கொண்டன. தெற்கு ஆஸ்திரேலியாவிலும் கோவிட் பரவலை வெற்றிகரமாக கையாண்டதாக பார்க்கப்படும் ஆளும் லிபரல் கட்சியின் தற்போதைய பிரீமியர் ஸ்டீவன் மார்ஷல் வெற்றிபெறுவார் என்றே கருதப்பட்ட்து. ஆனால் அவர் அதிர்ச்சிமிக்க தோல்வியை சந்தித்துள்ளார்.
கடந்த நான்கு ஆண்டுகளாக தெற்கு ஆஸ்திரேலியாவில் நாங்கள் செய்த சிறப்பான பணிகளை செய்ததாகவும், அது தமக்கு திருப்தி தருவதாகவும் பதவி விலகும் தற்போதைய பிரீமியர் ஸ்டீவன் மார்ஷல் கூறினார்.
தற்போது வெற்றி பெற்றிருக்கும் லேபர் கட்சி 16 ஆண்டுகள் ஆட்சி நடத்தி 2018 தேர்தலில் தோல்வி கண்டது. ஆனால் நான்கு ஆண்டு கால இடைவெளிக்குப்பின் லேபர் கட்சி மீண்டும் வெற்றிபெற்று ஆட்சியில் அமர்கிறது.
