புதிய பார்வை ஆசிரியரும், சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று, பெங்களூரு சிறையில் உள்ள, சசிகலாவின் கணவர் நடராஜன், கல்லீரல் மற்றும் சிறுநீரக செயலிழப்பால் பாதிக்கப்பட்டிருந்தார். கடந்த வருடம் அக்டோபர் மாதத்தில் ஒரே நேரத்தில், கல்லீரல் மற்றும் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை நடந்தது; சிகிச்சை முடிந்து, அவர் வீடு திரும்பினார். உடல் தேறி வந்த அவருக்கு, மார்பில் (நுரையீரல்) நோய்த்தொற்று ஏற்பட்டு நான்கு நாட்களுக்கு முன் மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சை பயனற்றுப் போக, அவர் இன்று உயிரிழந்ததாக மருத்துவமனை நிர்வாகம் அறிவித்துள்ளது.
அவரது உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இன்று காலை 7 மணி முதல் சென்னை பெசன்ட் நகர் வீட்டில் நடராஜன் உடல் பார்வைக்காக வைக்கப்படுகிறது. காலை 11 மணிக்கு அவரது உடல் சொந்த ஊரான தஞ்சை மாவட்டம் விளார் கிராமத்திற்கு கொண்டு செல்லப்படுகிறது. நடராஜனின் இறப்புச் சான்றிதழ் வழங்கப்பட்டதும் சசிகலா பிணையில் அனுப்பப்படுவார் என நம்பப்படுகிறது.
