நவுரு தீவில் தடுத்துவைக்கப்பட்டுள்ள 142 அகதி சிறுவர்களின் உளநிலையானது தொடர்ச்சியான முகாம் வாழ்க்கையினால் பாரதூரமாக பாதிக்கப்பட்டுவருவதாக நவுரு வட்டாரங்களை மேற்கோள்காட்டி The Guardian செய்தி வெளியிட்டுள்ளது.
திறந்த முகாம்களில் வாழ்க்கை, பாடசாலைகளுக்கு ஒழுங்கான வரவின்மை, சரியான நெறிப்படுதல்கள் இல்லை போன்ற பல காரணங்களினால் இந்த சிறுவர்களின் உளநிலை பாரியளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தடுப்பு முகாம் சூழ்நிலையும் அங்கு இடம்பெறும் சம்பவங்களும் இந்த சிறுவர்களின் மனங்களில் ஆழமாக பதிந்துவிடுகிறது என்றும், இது மிகவும் பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தவல்லது என்றும் மருத்துவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
நவுரு தீவிலுள்ள உளவள மருத்துவ நிபுணர்கள் மேற்கொண்டுள்ள ஆய்வறிக்கையின்படி, கூடாரங்களில் வாழும் இந்த சிறுவர்கள் மிகுந்த மன அழுத்த நோய்களுக்கு உள்ளாகிவருகிறார்கள் என்றும் அவற்றை குணமாக்குவதற்கான வசதிகள் நவுரு தீவில் கிடையாது என்றும் கூறியுள்ளார்கள்.
சுமார் ஐந்து வருடங்களுக்கு மேல் நவுரு தீவில் இவ்வாறு தடுத்துவைக்கப்பட்டுள்ள சிறுவர்களின் மனநிலை crises level எனப்படுகின்ற உச்ச புள்ளியை எட்டியிருப்பதாகவும், பல சிறுவர்கள் தற்கொலை முயற்சிகளில் இறங்கியிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இவ்வாறு தொடர்ச்சியான தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட மூன்று சிறுவர்களைக்கூட நீதிமன்ற உத்தரவின் ஊடாக ஆஸ்திரேலியாவுக்கு கொண்டுவந்து மருத்துவ உதவி வழங்கவேண்டிய சூழ்நிலையே நிலவுகிறது என்று The Guardian செய்தி மேலும் தெரிவித்திருக்கிறது.
தடுப்புமுகாங்களில் அகதிகளுக்கு மருத்துவ வசதிகளை வழங்கும் அமைப்பு நீதிமன்றத்தில் இந்த விவகாரம் குறித்து கவலை வெளியிட்டிருக்கும் அதேநேரம் தடுப்புமுகாம்களிலுள்ள சிறுவர்களின் உளவள மேம்பாடு குறித்த போதுமான மருத்து வசதிகள் நவுரு தீவில் இல்லை என்று கூறியிருக்கிறது.