ஆஸ்திரேலிய தடுப்பு முகாம்களில் குடிவரவு அதிகாரிகளால் முறைகேடான முறையில் நடத்தப்பட்ட அகதிகள் மற்றும் புகலிடக்கோரிக்கையாளர்களின் முறைப்பாடுகள் தொடர்பில் பகிரங்க விசாரணை மேற்கொள்ளப்பட்டு அவர்களுக்கு நட்ட ஈடு வழங்கவேண்டும் என்று ஆஸ்திரேலிய மனித உரிமைகள் ஆணையகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
தடுப்பு முகாம் விதிகளை மீற முயற்சிக்கும் அல்லது மீறிய அகதிகள் மற்றும் புகலிடக்கோரிக்கையாளர்களை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்கும், முகாம் விதிகளுக்கேற்ப அவர்களை நடத்துவதற்கும் குடிவரவு அதிகாரிகள் அளவுக்கதிகமான வலுவை (use of force) அவர்கள் மீது உபயோகித்திருப்பதாக பல முறைப்பாடுகள் கிடைத்திருக்கின்றன என்று மனித உரிமைகள் ஆணையகத்தின் தலைவர் Rosalind Croucher தெரிவித்தார்.
குறிப்பிட்ட முகாம்வாசிகளை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்காக வலுவை உபயோகிப்பதற்கு பதிலாக, அவர்களுக்குரிய தண்டனை முறையாக அவர்கள் மீது வலு (use of force) பயன்படுத்தப்பட்டிருக்கிறது என்று அவர் தெரிவித்தார்.
இதனைவிட, முகாம்வாசிகளின் கௌரவத்துக்கு இழுக்கு ஏற்படும் வகையில் பல சம்பவங்களில் குடிவரவு அதிகாரிகள் நடந்துகொண்டுள்ளார்கள் என்றும் Rosalind Croucher குறிப்பிட்டார் .
தேவையில்லாத வேளைகளிலும் அதிக நேரம் கைவிலங்கிடப்பட்டமை, பெண் முகாம்வாசிகளை கட்டுப்படுத்துவதற்கு ஆண் அதிகாரிகளை பயன்படுத்தியது உட்பட பல விடயங்களை மனித உரிமைகள் ஆணையகத்தின் தலைவர் Rosalind Croucher சுட்டிக்காட்டினார்.
