மெல்பேர்னுக்கும் அடிலெய்டுக்கும் இடையில் கடந்த 130 வருடங்களாக நடத்தப்பட்டுவருகின்ற Overland ரயில் சேவை இந்த வருடத்துடன் நிறுத்தப்படக்கூடிய ஆபத்து எழுந்துள்ளதாக தெரியவருகிறது.
குறித்த ரயில் சேவைக்கு கடந்த 20 வருடங்களாக விக்டோரியா மற்றும் தெற்கு ஆஸ்திரேலிய மாநில அரசுக்கள் நிதியுதவி வழங்கிவந்தநிலையில் தொடர்ந்தும் இந்த சேவைக்கு நிதி ஒதுக்கீடு செய்வதில் சிரமங்கள் உள்ளதாக தெற்கு ஆஸ்திரேலிய மாநில அரசு கோடி காட்டியுள்ளதை அடுத்து இந்த நிலமை எழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இரண்டு மாநிலங்களுக்கும் இடையில் வாரமொன்றுக்கு இரண்டு தடவைகள் மேற்கொள்ளப்படுகின்ற இந்த ரயில் சேவையினால் வருடமொன்றுக்கு 30 ஆயிரம் பயணிகள் பயனடைகிறார்கள் என்றும் பத்தரை மணித்தியால பயணமென்றாலும் சுற்றுலாப்பயணிகள் முதல் பல்வேறு தரப்பினர் இந்த ரயில் சேவையை இன்னமும் விரும்புகிறார்கள் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
ஆனால், போக்குவரத்து மார்க்கங்கள் வேறு தளங்களுக்கு சென்றுள்ளமையும் இந்த ரயில் சேவைக்கு தமது அரசு வருடமொன்றுக்கு ஒதுக்கீடு செய்யக்கூடிய மூன்று லட்சம் டொலர்களை வேறு தேவைகளுக்கு ஒதுக்கீடு செய்யவேண்டிய அவசியம் எழுந்துள்ளமையும் இந்தவருடத்துடன் இது குறித்து முடிவெடுக்கவேண்டிய கட்டாயத்துக்கு தம்மை இட்டுச்சென்றுள்ளதாக தெற்கு ஆஸ்திரேலிய போக்குவரத்து அமைச்சர் தெரிவித்துள்ளார்.
