மெல்பேர்ன் Broadmedows பகுதியில் குடிவரவு திணைக்களத்தினால் நிர்வகிக்கப்பட்டுவரும் இடைத்தங்கல் முகாமில் (MITA) தீக்குளித்து தற்கொலை செய்துகொள்ள முயன்ற அகதி இளைஞர் (வயது 23) ஒருவர் எரிகாயங்களுடன் காப்பாற்றப்பட்டுள்ளார்.
குறிப்பிட்ட முகாமில் ஆப்கான் இளைஞர் ஒருவர் உயிரிழந்து இரண்டு நாட்களில் இந்தச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
தனது அறையில் துடைக்கும் துணியை பற்றவைத்து அதில் தன்னையும் எரித்துக்கொள்ள முயன்றார் என்று கூறப்படும் இந்த இளைஞர் ஆப்கானை சேர்ந்தவர் என்றும் ஆஸ்திரேலியாவுக்கு பெற்றோர் - உறவினர்கள் எவருமின்றி பதினைந்து வயதில் தனியாக ஏனைய அகதிகளுடன் படகில் வந்தவர் என்றும் கூறப்படுகிறது.
முகாமிலிருந்து விடுதலை செய்யப்பட்டு அதன் பின்னர் மீண்டும் முகாமுக்கு கொண்டுவரப்பட்ட இவர் இரண்டு வருடங்களாக தடுப்புமுகாமில் வைக்கப்பட்டிருக்கிறார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னர் விடுதலைசெய்யப்பட்டிருந்தபோது கடினமாக தொழில் செய்து உழைப்பில் ஈடுபட்டுவந்ததாகவும் தனது காரிலேயே தூங்கி எழுந்து வேலைக்கு சென்று வந்தார் என்றும் கூறப்படுகிறது.
குறிப்பிட்ட இளைஞரது விஸா உள்துறை அமைச்சினால் நிராகரிக்கப்பட்டு தடுப்புமுகாமுக்கு கொண்டுவரப்பட்ட நாள் முதல் அவர் அனைத்து நம்பிக்கையையும் இழந்து மிகுந்த விரக்தியடைந்திருந்ததாக அவரது நண்பர்கள் கூறியுள்ளனர்.
தடுப்புமுகாமில் ஞாயிறன்று இரவு இடம்பெற்ற இந்த சம்பவத்தையடுத்து அவசர அம்புலன்ஸ் அழைக்கப்பட்டு, குறிப்பிட்ட இளைஞர் மெல்பேர்ன் Northern வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டதாகவும் எரிகாயங்களுக்கு சிகிச்சை வழங்கப்பட்டு முகாமுக்கு திருப்பிக்கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
