மெல்பேர்ன் குடிவரவு தடுப்பு முகாமில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இன்று அதிகாலை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
Broadmeadows-இலுள்ள குடிவரவு தடுப்புமுகாமில் வாழ்ந்த 23 வயது ஆப்கான் இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த நபரைக் காப்பாற்றுவதற்கு CPR-முதலுதவிச்சிகிச்சை வழங்கப்பட்ட போதும் அது பலனளிக்கவில்லை என குறிப்பிடப்படுகிறது.
இம்மரணம் சந்தேகத்திற்கிடமான ஒன்றாக கருதப்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த மரணம் தொடர்பில் மேலதிக விபரங்கள் எதையும் வெளியிடாத பொலிஸார் குறித்த நபரின் சடலம் மரணவிசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
மேலும் இந்த மரணத்தை உறுதிசெய்துள்ள குடிவரவுத்துறை குறிப்பிட்ட நபரது குடும்பத்தினருக்கு தமது அனுதாபங்களையும் தெரிவித்துள்ளது.
மரணமடைந்த நபருக்கு 5 மாதங்களுக்கு முன்னர் விசா வழங்கப்பட்டிருந்ததாகவும் அவர் விரைவில் முகாமைவிட்டு வெளியே செல்லவிருந்ததாகவும் அவரது முகாம் நண்பர்கள் தெரிவித்துள்ளனர்.
குறித்த நபருக்கு வழங்கப்பட்ட மாத்திரைகள் இரண்டு நாட்களுக்கு முன்னர் நிறுத்தப்பட்டிருந்ததாகவும் முகாமிலுள்ளவர்களின் உடல்நலனில் எவருக்கும் அக்கறை இல்லை எனவும் அங்குள்ள சிலர் தெரிவித்துள்ளனர்.
இந்தநிலையில் தடுப்பு முகாம்களில் தொடர்ச்சியாக மரணங்கள் இடம்பெற்றுவருவதைச் சுட்டிக்காட்டியுள்ள அகதிகள் செயற்பாட்டாளர்கள் குறித்த மரணங்கள் தொடர்பிலும் தடுப்பு முகாம்கள் தொடர்பிலும் சுயாதீன விசாரணை உடனடியாக நடத்தப்படவேண்டுமென வலியுறுத்தியுள்ளனர்.
Lifeline 13 11 14
beyondblue 1300 22 4636
