மெல்பேர்ன் டண்டினோங் பகுதியிலுள்ள Axis Tours and Travels என்ற நிறுவனத்தினூடாக இந்தியா சென்றுவருவதற்கான பயணச்சீட்டுக்களைக் கொள்வனவு செய்த பலர், தமது பணத்தை இழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த டிசம்பர் 2016 முதல் இயங்கிவந்த Axis Tours and Travels நிறுவனம் பல வாடிக்கையாளர்களிடம் பயணச்சீட்டுக்களை பதிவுசெய்வதாகக்கூறி, பண மோசடியில் ஈடுபட்ட அதேநேரம் குறித்த நிறுவனம் தற்போது liquidation-க்குள்ளாகி, மூடப்பட்டுவிட்ட நிலையில், இதனூடாக கொள்வனவு செய்யப்பட்ட பயணச்சீட்டுக்கள் எவ்வித முன்னறிவிப்புமின்றி ரத்துச்செய்யப்பட்டுவிட்டதாக குறிப்பிடப்படுகின்றது.
தமது பயணச்சீட்டு ரத்துச் செய்யப்பட்டுவிட்டது என்பதை அறியாததால், விமானநிலையங்களுக்குச் சென்று தாம் பெரும் சிரமங்களை எதிர்கொண்டதாக பாதிக்கப்பட்ட சிலர் SBS மலையாள ஒலிபரப்பிடம் தெரிவித்துள்ளனர்.
Axis Tours and Travels நிறுவனத்திடமிருந்து விமானப்பயணச்சீட்டுக்களைக் கொள்வனவு செய்த சிலர், 7000 டொலர்கள் வரை இழந்துள்ளநிலையில், இது தொடர்பில் சம்பந்தப்பட்ட தரப்புக்களிடம் முறையிட்டுள்ளபோதும், இந்நிறுவனம் liquidation-க்குள்ளாகியிதால் பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்களின் பணம் திரும்பக் கிடைப்பது சந்தேகமே என தெரிவிக்கப்படுகிறது.
