மெல்பேர்னில் பயங்கரவாத தாக்குதல்களை மேற்கொள்வதற்கு திட்டமிட்டார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் இன்று காலை மூவர் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.
மெல்பேர்னின் வெவ்வேறு பகுதிகளில் வாழும் இந்த மூவரின் வீடுகளிலும் இன்று காலை அதிரடியாக நுழைந்த ஆஸ்திரேலிய பயங்கரவாத தடுப்பு பொலீஸார் மற்றும் புலனாய்வுத்துறையினர் இவர்களை கைது செய்திருக்கிறார்கள்.
பயங்கரவாத குற்றச்சாட்டுக்களின் கீழ் இவர்களை கைது செய்வதற்கு பெற்றுக்கொள்ளப்பட்ட விசேட பிடியாணையின் கீழ் இன்று அதிகாலை மெல்பேர்னின் நான்கு இடங்களில் தேடுதல் நடத்தப்பட்டு, இவர்கள் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.
கைது செய்யப்பட்ட மூவரும் துருக்கி நாட்டை பூர்வீகமாக கொண்ட ஆஸ்திரேலிய பிரஜைகள் என்றும் இவர்கள் மூவர் தொடர்பாகவும் கடந்த இரண்டு வருடங்களாக புலனாய்வுத்துறையினர் விசாரணகளை மேற்கொண்டுவந்தார்கள் என்றும் இவர்களது கைது தொடர்பாக ஊடகவியலாளர் மாநாட்டினை நடத்திய பாதுகாப்பு தரப்பினர் தெரிவித்துள்ளார்கள்.
இவர்கள் மூவரதும் ஆஸ்திரேலிய கடவுச்சீட்டுக்கள் முறையே கடந்த ஜனவரி, மார்ச், ஒக்டோபர் மாதங்களில் ரத்து செய்யப்பட்டிருந்தன என்றும் இவர்களில் ஒருவர் 2007-இல் L-plate போடாமல் வாகனமோட்டியவர் என்ற குற்றத்தை தவிர வேறெந்த குற்றப்பின்னணியும் இல்லாதவர் என்றும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
ISIS இயக்க கோட்பாடுகளினால் வசீகரிக்கப்பட்ட இவர்கள் பயங்கரவாத குற்றச்செயல்களை மேற்கொள்வதற்கு தீர்மானித்திருக்கிறார்கள் என்பது உறுதியாகியிருக்கிறது என்றும் அண்மையில் இவர்கள் கைத்துப்பாக்கிகளை வாங்குவதற்கு திட்டமிட்டது தெரியவந்துள்ளது என்றும் பாதுகாப்பான App வழியாக தங்களது தொடர்பாடல்களை மேற்கொண்டுவந்த இந்நபர்களிடம் மேற்கொள்ளவுள்ள மேலதிக விசாரணைகள் மூலம் ஏனைய விவரங்கள் பெற்றுக்கொள்ளப்படவுள்ளன என்றும் பொலீஸார் கூறியுள்ளனர்.
