வாகனத்தரிப்புக்கான கட்டண இயந்திரங்களில் (parking meter) போடப்படும் நாணயங்களை சுமார் ஆறு வருடங்களாக திருடினார் என்று குற்றஞ்சாட்டப்பட்ட மெல்பேர்ன் நகர மைய கவுன்ஸிலின் parking meter repair man- பழுது பார்ப்பவர், தனது குற்றத்தை ஒப்புக்கொண்டதை அடுத்து ஒன்பது மாத சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
2011 ஆம் ஆண்டுக்கும் 2017 ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் மெல்பேர்ன் நகரத்திலுள்ள வாகனத்தரிப்பிட கட்டண இயந்திரங்களிலிருந்து சுமார் ஒரு லட்சத்து 70 ஆயிரம் டொலர்களை திருடினார் என்ற குற்றத்திற்கு இந்த தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
இயந்திரங்களில் பழுதுள்ளதா என்பதை உறுதிப்படுத்துவதற்காக அவற்றுக்கான சாவிகளை வைத்திருந்த குறிப்பிட்ட நபர், இன்னும் சிலரை தனக்கு உதவிக்கு அமர்த்தி இந்த திருட்டினை மேற்கொண்டிருந்தார் என்றும் இந்த திருட்டு தொடர்பாக சந்தேகம் கொண்ட கவுன்ஸில் நிர்வாகம் இரகசியமாக இவரது நடவடிக்கைளை நோட்டமிட்டபின்னர் ஆறு வருட மர்மம் வெளிச்சத்துக்கு வந்தது என்றும் நீதிமன்றில் தெரிவிக்கப்பட்டது.
இயந்திரங்களிலிருந்து நாணயங்களை திருடிக்கொண்டு நேரடியாக வங்கியில் சென்று வைப்பிலிட்டுக்கொண்ட குறிப்பிட்ட நபர், அந்தப்பணத்தில் நண்பர்களுடன் உல்லாசமாக பொழுதைக்கழித்தது தெரியவந்திருப்பதாகவும் குறிப்பிடப்படுகிறது.
ஐம்பது வயதுடைய இந்த நபர் இருபது வருடங்களாக மெல்பேர்ன் நகரின் பல மையங்களில் parking meter பழுதுபார்ப்பவராக பணிபுரிந்துள்ளார்.
நீதிமன்றில் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டு தான் இப்படியொரு குற்றத்தை வாழ்நாளில் செய்யவே மாட்டேன் என்று வருத்தம் தெரிவித்ததையடுத்து - இந்தக்குற்றத்தை செய்வதற்கு இந்த வயது மிகவும் முதியது என்று தெரிவித்த நீதிபதி ஒன்பது மாத சிறைத்தண்டனையை வழங்கினார். சிறைவாசம் முடித்து வந்தபின்னர், 250 மணிநேர இலவச சமூக வேலைக்கும் நீதிபதி உத்தரவிட்டார்.
