வீதியை கடந்துகொண்டிருந்த பெண் ஒருவரையும் ஏழு சிறுமிகளையும் மோதிவிட்டு வாகனத்திலிருந்து இறங்கி தப்பியோடியுள்ள இளைஞர் ஒருவரை விக்டோரிய காவல்துறையினர் வலை வீசி தேடி வருகிறார்கள். இந்த சம்பவம் இன்று பிற்பகல் 3.30 மணியளவில் மெல்பேர்னின் தென் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள Pakenham பகுதியில் இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில் காயமடைந்த முப்பது வயது மதிக்கத்தக்க பெண்ணின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும் நெஞ்சு மற்றும் முதுகு பகுதியில் படுகாயமடைந்த நிலையில் அவர் Alfred வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார் என்றும் அம்புலனஸ் விக்டோரியா தெரிவித்துள்ளது.
அதேவேளை, சம்பவத்தில் சிறிய சிராய்ப்பு மற்றும் வெட்டுக்காயங்களுக்கு உள்ளான மூன்று பாடசாலை சிறுமிகள் Dandenong வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். மேலும் இரண்டு சிறுமிகள் றோயல் மெல்பேர்ன் சிறுவர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளர். இன்னும் இரண்டு சிறுமிகளுக்கு சம்பவம் இடம்பெற்ற இடத்திலேயே அம்புலன்ஸ் மருத்துவர்களால் சிகிச்சையளிக்கப்பட்டுள்ளது.
வேலை முடிந்து வீடு சென்றுகொண்டிருக்கும் வேளையில் இடம்பெற்ற இந்த சம்பவம் மெல்பேர்னின் தென் கிழக்கு பகுதியில் மிகுந்த பரபரப்பையும் போக்குவரத்து நெருக்கடியையும் ஏற்படுத்தியுள்ளது.
காயமடைந்தவர்களுக்கு சிகிச்சையளிக்கும் பணிகள் ஒருபுறம் நடைபெற்றுக்கொண்டிருக்க, இந்த சம்பவத்துக்கு காரணமான இளைஞரை தேடும் நடவடிக்கையை பொலீஸார் ஆரம்பித்துள்ளனர். Ute ரக வாகனத்தில் வந்த இளைஞர் ஒருவரே இந்த சம்பவத்துக்கு காரணம் என்றும் சம்பவம் இடம்பெற்றவுடன் தனது வாகனத்திலிருந்து இறங்கிய குறிப்பிட்ட நபர் வீதி வழியாக ஓடி தப்பிச்சென்றிருக்கிறார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
