ஆஸ்திரேலியாவுக்கு படகு மூலம் வரமுற்பட்டு அது வெற்றியளிக்காத நிலையில், இந்தோனேசியாவில் தங்கியுள்ளவர்கள் உட்பட மேலும் பல புகலிடக்கோரிக்கையாளர்கள் நேற்று பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.
இலங்கை, ஆப்கானிஸ்தான், ஈராக், சூடான், சோமாலியா உட்பட பல நாடுகளைச் சேர்ந்த புகலிடக்கோரிக்கையாளர் இந்தோனேசியாவில் கடந்த 4 வருடங்களுக்கும் மேலாக வாழ்ந்துவருகின்றனர்.
குறித்த 14 ஆயிரம் பேரில் 7,500 பேர் ஐ.நாவின் அகதிகளுக்கான அமைப்பான UNHCR-இனால் உண்மையான அகதிகள் என இனங்காணப்பட்டு அகதிகள் அட்டையும் வழங்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் எதிர்காலம் என்னவென்று தெரியாமல், தாம் மூன்றாவது நாடொன்றில் குடியேற்றப்படுவோம் என்ற நம்பிக்கையுடன் நாட்களைக் கடத்துவதாகவும், விரைவில் தமக்கான தீர்வு கிடைக்க வேண்டுமெனவும் இப்புகலிடக்கோரிக்கையாளர்கள் வலியுறுத்தினர்.
இந்தோனேசியாவில் தங்கியிருக்கும் இவர்களுக்கு வேலை செய்வதற்கோ அல்லது அரச கல்வி மற்றும் மருத்துவ சேவைகளைப் பெறுவதற்கோ அந்நாட்டு அரசு அனுமதி வழங்காது என்பது குறிப்பிடத்தக்கது.
