மெல்பேர்னை கடந்த மாதம் உலுக்கிச்சென்ற மாணவி Aya Maasarwe படுகொலை மிகக்கொடூரமான முறையில் இடம்பெற்றிருப்பதாக அது தொடர்பான மேலதிக தகவலைவெளியிட்டுள்ள Daily Mail ஊடகம் தெரிவித்துள்ளது.
மாணவி Aya Maasarwe பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு அதன் பின்னர் சுத்தியல்போன்ற பாரமான பொருளால் அடித்தும் எரித்தும் கொல்லப்பட்டிருக்கிறார் என்று அந்தச்செய்தியில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
மெல்பேர்னின் வட பகுதியான Bundoora பிரதேசத்தில் கடந்த மாதம் இடம்பெற்ற மாணவி Aya Maasarwe படுகொலை தொடர்பாக 20 வயது இளைஞர் கைது செய்யப்பட்டு குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டு தற்போது தடுப்புக்காவலில் உள்ளார். அடுத்த ஜூன் மாதம் இவருக்கு எதிரான அடுத்த நீதிமன்ற திகதி குறிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், மாணவி Aya Maasarwe படுகொலை செய்யப்பட்டது தொடர்பான முழுமையான விவரங்கள் அவரது தந்தையிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கின்றன. மாணவியின் தந்தை Saeed Maasarwe அந்த விவரங்களின் அடிப்படையில் சம்மந்தப்பட்ட தரப்புக்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்வதற்கும் ஆஸ்திரேலியாவின் சட்ட நிறுவனம் உதவி செய்வதாக அறிவித்துள்ளது.
தனது மகள் தங்கியிருந்த பல்கலைக்கழக குடியிருப்புக்கு நடந்து செல்லும் பாதையில் போதிய வெளிச்ச வசதிகளை மேற்கொள்ளாத பல்கலைக்கழக நிர்வாகத்துக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பது தொடர்பாகவும் Aya Maasarweயின் தந்தை பரிசீலித்துவருவதாக குறிப்பிட்ட சட்ட நிறுவனம் தெரிவித்துள்ளது.
அதேவேளை, விக்டோரிய சட்ட முறைகள் மற்றும் நீதிக்கட்டமைப்புக்களின் செயற்பாடுகள் குறித்தும் Aya Maasarweயின் தந்தைக்கு விளக்கமளித்து வருவதாக அந்த சட்ட நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது.
