SKIP TO MAIN CONTENT

மாத்திரைகளை உடைத்து சாப்பிடுவது சரியா?

மாத்திரைகளை உடைத்து சாப்பிடுவது சரியா?

Spilt bottle of pills on counter close up
Pill Bottle Source: AAP

3 min read

Published

Updated

By Raymond Selvaraj


Skip to article content

ஆஸ்திரேலியாவில் மருந்துகள் எனும் தலைப்பில் கேள்வி – பதில் வடிவில் இந்த கட்டுரையை  எழுதியிருப்பவர் அன்பு ஜெயா அவர்கள். அவர் Pharmaceutical Chemistயாக பணியாற்றியவர்.   

  1. 1.   PBS-என்பது என்ன?

மருந்துகள் தொடர்பான அரசின் திட்டமான PBS-என்பது Pharmaceutical Benefit Scheme என்பதன் சுருக்கம். இது 1948-ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட மத்திய அரசின் திட்டம். இந்த திட்டம் 2500க்கும் மேற்பட்ட Prescription மருந்துகள் நோயாளிகளுக்கு குறைந்த விலையில் கிடைக்க வழிசெய்கிறது. இதன்படி சாதாரண மக்கள் ஒரு மருந்திற்கு அதிகபட்ச விலையாக $38.30 செலுத்த நேரும். அரசாங்கத்தின் சலுகை அட்டை வைத்திருக்கும் முதியோர் போன்றவர்கள் $6.20 செலுத்தவேண்டி இருக்கும். இந்த ஆண்டு ஜனவரி 1-ம் தேதி முதல், அதிக பட்ச விலையில் 1 டாலர் குறைத்து வாங்க பார்மசிகளுக்கு அனுமதி உண்டு. ஆனால் கட்டாயமில்லை. PBS-திட்டத்தின் மூலம் மருந்திற்கான உண்மையான விலைக்கும் நமக்குக் கிடைக்கும் விலைக்கும் உள்ள வித்தியாசத்தை அரசாங்கம் மக்கள் வரிப் பணத்திலிருந்து கொடுக்கின்றது.

Generic product-க்குப் பதிலாக Leader Product-தான் வேண்டுமென்று நாம் கேட்டோமானால், சில மருந்துகளுக்கு நாம் Brand Premium என்று கொஞ்சம் அதிக விலை கொடுக்கவேண்டிதிருக்கும். இவ்வாறு செய்ய Pharmacist-களுக்கு அரசு அனுமதி அளித்துள்ளது.

 

  1. 2.   எல்லா பார்மசிகளிலும் மருந்துகளின் விலை ஏன் ஒரே மாதிரி இருப்பதில்லை?
  • சில பார்மசிகள் தங்களுடைய லாபத்தை கொஞ்சம் குறைத்துக் கொள்கிறார்கள்.
  • Pharmacist-கள் தங்களுடைய  Dispensing Fee-ஐ குறைத்துக் கொள்கிறார்கள் அல்லது வாங்குவதில்லை.
  • சில பார்மசி குழுமங்கள் பல கடைகளுக்குத் தேவையான மருந்துகளை மொத்தமாக அதிகமான அளவில் வாங்கும்போது அவர்களுக்கு விலை குறைவாகக் கிடைக்கிறது. அதனால் நமக்குக் கொடுக்கும் விலையை அவர்களால் குறைத்துக் கொள்ள முடிகிறது.
  • சில பன்னாட்டு நிறுவனங்கள் உற்பத்தி செலவு குறைவாக உள்ள நாடுகளில் உள்ள தங்கள் தொழிற்சாலைகளில் தயாரித்த மருந்துகளை ஆஸ்திரேலியாவில் குறைந்த விலையில் விற்பனை செய்கிறார்கள். அந்த மருந்துகளை விற்கின்ற பார்மசிகளில் அவை மற்ற கடைகளைவிட குறைந்த விலையில் கிடைக்கும்.

 

  1. 3.   வெளிநாடுகளில் உற்பத்தி செய்யப்பட்டு இங்கு விற்பனை செய்யப்படும் மருந்துகளின் தரத்தை  Therapeutic Goods Administration  எப்படி கண்காணிக்கிறது?

வெளிநாடுகளில் தயாரிக்கப்பட்டு இங்கு விநியோகம் செய்யப்படும் மருந்துகளுக்கு அனுமதி வழங்கும் முன், TGA-வில் அதற்கென பிரத்யேகமாக உள்ள ஆய்வாளர்கள் குழு அந்த மருந்துகளைத் தயாரிக்கும் தொழிற்சாலையை தணிக்கை (audit) செய்ய ஏற்பாடுகள் செய்யப்படுகின்றது. அந்த தணிக்கையின் மூலம் அங்கு தயாரிக்கப்படும் மருந்துகள் தரமானவைதான் என்பதை உறுதி செய்த பிறகுதான் அந்த மருந்துகளின் விற்பனைக்கு அனுமதி வழங்கப்படுகிறது. அதனால் TGA-வின் அனுமதி பெற்று விற்கப்படும் மருந்துகளின் தரம் குறித்து அஞ்ச வேண்டியது இல்லை.

 

  1. 4.   Panadol, Aspirin போன்ற மருந்துகளை உபயோகிக்கலாமா? அது சரியா?

இந்த மருந்துகள் மருத்துவர் சீட்டு இல்லாமல் வாங்கக் கூடிய OTC medicine-கள். இவற்றை தேவைப்படும்போது அளவாக உபயோகிப்பதில் தவறில்லை. ஆனால், தொடர்ந்து பல நாட்கள் உபயோகிக்க வேண்டிய நிலைமையாக இருந்தால், உங்கள் நோய்க்கு வேறு காரணங்கள் இருக்கக்கூடும். எனவே உங்கள் மருத்துவரின் உதவியை நாடவேண்டும்.

 

  1. 5.   மாத்திரைகளை உடைத்து சாப்பிடுவது சரியா? அதனால் ஏதாவது பாதிப்பு உண்டா?

நாம் சாதரணமாக உபயோகிக்கும் பல மாத்திரைகள் நமது வயிற்றுப் பகுதியில் கரையும்படி தயாரிக்கப்பட்டவை. அவற்றை இரண்டாக உடைத்து சாப்பிடுவதில் பாதிப்பு இருக்காது. ஆனால் சில மாத்திரைகள் நமது சிறுகுடல் பகுதியில் மட்டும் கரையும்படி தயாரிக்கப்படுபவை. அவற்றை Enteric coated மாத்திரை என்பார்கள். அந்த மாத்திரைகளை உடைத்து சாப்பிடக் கூடாது. அதேபோல, sustained release என்ற வகை மாத்திரைகளையும் உடைத்து சாப்பிடக்கூடாது. மாத்திரைகளை முழுதாகச் சாப்பிடுவதில் சிரமம் உள்ளவர்கள் அவற்றை வாங்கும்போது Pharmacist-ஐ இதுபற்றி கேட்டுத் தெரிந்து கொள்வது நல்லது.

 

  1. 6.   Antibiotics - நல்ல மருந்துகளா? மருத்துவர் எழுதிக்கொடுக்கும் அத்தனை மாத்திரைகளையும் சாப்பிட்டு முடிக்க வேண்டுமா?

Antibiotics உங்கள் மருத்துவர் உங்கள் உடல்நிலையை சோதித்த பின் எழுதிக் கொடுக்கும் மருந்துகள். அவை உங்களுக்கு நன்மை செய்வதாகத்தான் இருக்கும். உங்கள் மருத்துவர் அனுமதி இல்லாமல் அவற்றை பாதியில் நிறுத்தக் கூடாது. அப்படி நிறுத்துவதால் உங்கள் உடம்பிலுள்ள நோய்க் கிருமிகள் வீரியம் (Resistance) அதிகமாகி அடுத்த முறை நீங்கள் அந்த antibiotic-ஐ உபயோகிக்கும் போது பலன் அளிக்காது. அப்படி வீரியம் அதிகமான கிருமிகள் உங்களிடமிருந்து மற்றவர்களுக்குப் பரவும்போது அவர்களுக்கும் அந்த antibiotic பயனளிக்காது. இது சமூகத்திற்கும் கெடுதல் விளைவிக்கும். ஒரு வேளை அந்த Antibiotic உங்களுக்கு வேறு ஏதாவது பக்க விளவுகளை ஏற்படுத்தினால், அதை நிறுத்துவிட்டு மருத்துவரின் உதவியை நாடவேண்டும்.

 

(கட்டுரையாளர்: அன்பு ஜெயா, Pharmaceutical Chemist ) 

 

இக்கட்டுரையில் தரப்பட்டிருக்கும் தகவல்கள் பொதுவான தகவல் மட்டுமே. அதிக தகவலுக்கும், குறிப்பிட மருந்துபொருட்கள் குறித்த தகவலுக்கும் நீங்கள் Therapeutic Goods Administration ஐ தொட்ரபுகொள்ளுங்கள். TGA-வின் இணைய தளம் www.tga.gov.au TGA தகவல் அறியும் தொலைபேசி இலக்கம்: 1800 020 653 அல்லது 02 6232 8644. மின்னஞ்சல் முகவரி info@tga.gov.au

 


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now