அடுத்தவருடம் ஜனவரி மாதம் முதல் தபால் தலை/முத்திரையின் விலையை 10 சதத்தினால் அதிகரிப்பதற்கு நுகர்வோர் ஆணைக்குழுவிடம் Australia Post நிறுவனம் கோரிக்கை முன்வைத்துள்ளது.
கடந்த வருடம் தபால் சேவை 19 கோடி டொலர் நட்டமடைந்துள்ளதாக அந்த நிறுவனத்தின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
ஒரு கடிதம் என்றாலும் 100 கடிதங்கள் என்றாலும் தபால்காரர்கள் வீட்டு முகவரிகளை தேடிச்செல்லவேண்டியது இந்த தொழில்துறையில் உள்ள கட்டாய கடமை. Australia Post தபால்காரர்கள் வருடமொன்றுக்கு ஒரு கோடி 21 லட்சம் முகவரிகளுக்கு பயணம் செய்கிறார்கள். Australia Post விநியோகிக்கும் கடிதங்களில் 97 வீதமானவை அரச மற்றும் வர்த்தக நிறுவனங்களினுடையவை. ஆகவே, இந்த தொழிலிலுள்ள சிக்கல்களை புரிந்துகொண்டு சில கட்டண உயர்வுகளை கொண்டுவருவது தங்களுக்கு கட்டாயமாகியுள்ளது- என்று Australia Post நிறுவனத்தின் பேச்சாளர் மேலும் கூறியுள்ளார்.
இந்த 10 சத முத்திரை கட்டண உயர்வு அங்கீகரிக்கப்பட்டால், ஆஸ்திரேலிய அஞ்சல் வரலாற்றில் முதல்தடவையாக முத்திரையின் விலை $1.10 என்ற உயர் கட்டணமாகவுள்ளது என்றும் ஓய்வூதியர்கள் மற்றும் முன்னாள் படைவீரர்கள் மற்றும் குடும்பத்தினருக்கான முத்திரைக்கட்டணங்களில் எந்த மாற்றமும் ஏற்படுத்தப்படமாட்டாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
