Group 7 அல்லது சுருக்கமாக G7 என்று அழைக்கப்படும் உலகின் மிகவும் வளர்ச்சியடைந்த அல்லது பொருளாதார வலிமை மிக்க நாடுகளின் கூட்டமைப்பின் 45வது உச்சி மாநாடு பிரான்ஸ் நாட்டின் பியரிட்ஸ் நகரில் நேற்று துவங்கியது. இம்மாநாடு மூன்று நாட்கள் நடைபெறும்.
முதன்முறையாக இந்த மாநாட்டில் பார்வையாளர் நாடாக ஆஸ்திரேலியா பங்கேற்கிறது. மாநாட்டில் பங்கேற்க ஆஸ்திரேலியாவுக்கு விடுக்கப்பட்ட அழைப்பு மிகவும் மதிப்பு மிக்க ஒன்றாக பார்க்கப்படுகிறது.
இந்த மாநாட்டில் பிரதமர் Scott Morrison கலந்துகொண்டுள்ளார். பிரதமர் Scott Morrison மாநாட்டில் கலந்துகொள்ளும் வாய்ப்பை பயன்படுத்தி அமெரிக்க அதிபர் Donald Trump, பிரிட்டனின் புதிய பிரதமர் Boris Johnson ஆகியோருடன் தனிப்பட்ட பேச்சுவார்த்தைகளை நடத்தவுள்ளார்.
G7 அமைப்பில் உள்ள உறுப்பினர் நாடுகளான கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், பிரிட்டன் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளுடன் ஆஸ்திரேலியா உறுப்பினர் நாடாக ஏற்றுக்கொள்ளப்பட்டு G7 அமைப்பு G8 அமைப்பாக மாறும் சாத்தியம் உடனடி இல்லை என்றாலும், அதற்கான வாய்ப்பேயில்லை என்று கூறமுடியாது என்று அரசியல் வல்லுனர்கள் கூறுகின்றனர்.
இந்தாண்டு பிரான்ஸ் நாட்டில் நடைபெறும் மாநாட்டில் உலகில் பெண்களுக்கு எதிராக நிலவும் சமத்துவமின்மைக்கு எதிராக G7 அமைப்பு நாடுகள் என்ன செய்யலாம் என்பது குறித்து கவனம் செலுத்தப்படுகிறது.
இந்த மாநாட்டில் இந்தியா, சிலே, தென்னாப்பிரிக்கா நாடுகளும் பார்வையாளர் நாடுகளாக கலந்துகொண்டுள்ளன.
இந்த மாநாட்டில் கலந்துகொள்ள பிரான்ஸ் சென்றுள்ள G7 அமைப்பு நாடுகளின் தலைவர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து கண்டன ஆர்பாட்டங்கள் நடந்து வரும் அதே வேளையில், இந்த தலைவர்களை கேலி செய்தும், விமர்சித்தும் சுவரொட்டிகளும் ஒட்டப்பட்டுள்ளன.
