ஆஸ்திரேலிய அரசு மற்றும் தனியார்துறையை மையப்படுத்தி மேற்கொள்ளப்பட்டுள்ள இணைய தாக்குதலின் பின்னணியில் சீனா இருக்கலாம் என ஆஸ்திரேலிய அரச முகவர் நிறுவனங்கள் நம்புவதாக ABC ஊடகம் செய்திவெளியிட்டுள்ளது.
இவ்விணைய தாக்குதல் தொடர்பில் இன்றுகாலை பத்திரிகையாளர் சந்திப்பொன்றை நடத்திய பிரதமர் ஸ்கொட் மொறிசன், குறித்த தாக்குதலின் பின்னணியில் வெளிநாட்டு சக்தி ஒன்று இருப்பதாக தெரிவித்திருந்தபோதிலும் அவர் என்ன நாடு என்பதைக் குறிப்பிடவில்லை.
ஆஸ்திரேலிய அரசு மற்றும் தனியாரின் இணையதள பக்கங்களுக்குள் நுழைந்துள்ள இணையதிருடர்கள் முக்கியமான உள்கட்டமைப்பு, அரசின் திட்டங்கள், கொள்கை முடிவுகள், முதலீடு போன்றவை தொடர்பான பல்வேறு தகவல்களை திருட முயற்சித்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
எனினும் பாரியளவிலான தகவல்திருட்டு இடம்பெற்றிருக்கலாம் எனத் தாம் நம்பவில்லை எனத் தெரிவித்துள்ள பிரதமர் ஸ்கொட் மொறிசன், இணைய தாக்குதலிலிருந்து பாதுகாத்துக்கொள்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், ஏனைய நிறுவனங்களும் மக்களும் இதிலிருந்து தம்மைப் பாதுகாத்துக்கொள்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வலியுறுத்தியுள்ளார்.
அண்மைக்காலமாகவே சீனா-ஆஸ்திரேலியா இடையிலான உறவில் முறுகல்நிலை ஏற்பட்டுள்ள பின்னணியில், ஆஸ்திரேலியாவை இலக்குவைத்து மேற்கொள்ளப்படும் இணைய தாக்குலுக்கு சீனாவே காரணம் என நம்புவதற்கு போதுமான காரணிகள் இருப்பதாக சில அரச முகவர் நிறுவனங்களை மேற்கோள்காட்டி ABC செய்திவெளியிட்டுள்ளது.
