லெபனானில் இருந்து நவீன ரக துப்பாக்கிகள் மற்றும் ஆயுதங்களை கொள்முதல் செய்வதற்கு திட்டமிட்டதாக கூறப்படும் நபர் ஒருவர் மெல்பேர்ன் விமானநிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
குறிப்பிட்ட நபர் இந்த சட்டவிரோத நடவடிக்கை தொடர்பான காரியங்களை நிறைவுசெய்துகொண்டு ஆஸ்திரேலியா திரும்புகையில் - மெல்பேர்ன் விமான நிலையத்தில் வந்திறங்கியவுடன் பெடரல் பொலீஸாரால் கடந்த ஞாயிறு இரவு கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த டிசெம்பர் மாதம் முதல் மேற்கொண்டுவந்த விசாரணைகளின் அடிப்படையில் இந்த கைது நடவடிக்கையை மேற்கொண்டிருப்பதாக தெரிவித்துள்ள பொலீஸார், இந்த நபர் லெபனானில் இருந்து ஏகே 47 மற்றும் கைத்துப்பாக்கிகளை கொள்முதல்செய்து சட்டவிரோதமாக ஆஸ்திரேலியாவுக்குள் கொண்டுவருவதற்கு திட்டமிட்டிருந்தார் என்று தெரிவித்துள்ளனர்.
குறிப்பிட்ட நபருக்கு எதிராக ஏழு பிரிவுகளின் கீழ் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து நேற்று நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டபோது, சந்தேக நபரை எதிர்வரும் ஜனவரி மாதம் வரைக்கும் தடுப்புக்காவலில் வைக்குமாறு மெல்பேர்ன் மாஜிஸ்ரேட் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார்.
