இந்தியாவிலிருந்து அனுப்பப்பட்ட திருமண அழைப்பிதழ்களுக்குள் போதைப்பொருள் மறைத்துவைக்கப்பட்டமை கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து இதுதொடர்பில் இளைஞர் ஒருவரை ஆஸ்திரேலிய எல்லைப் பாதுகாப்பு அதிகாரிகள் கைதுசெய்துள்ளனர்.
கடந்த பெப்ரவரி மாதம் 20ம் திகதி இந்தியாவிலிருந்து வந்த தமிழ் திருமண அழைப்பிதழ்கள் மற்றும் உடைகள் அடங்கிய பொதியைப் பரிசோதித்தபோது அதற்குள் Pseudoephedrine என்ற போதைப்பொருள் மறைத்துவைக்கப்பட்டிருந்தமை கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து விசாரணைகளை ஆரம்பித்திருந்த ஆஸ்திரேலிய எல்லைப் பாதுகாப்பு அதிகாரிகள், நேற்றையதினம் நியூ சவுத் வேல்ஸ் பொலிஸாரின் உதவியோடு Arncliffe, Bexley , Revesby ஆகிய 3 இடங்களில் சோதனை நடத்தியதுடன் 20 வயது இளைஞர் ஒருவரைக் கைதுசெய்துள்ளனர்.
சட்டத்திற்குப் புறம்பாக போதைப்பொருள் கடத்துதல் உட்பட 3 பிரிவுகளில் குறித்த இளைஞர் மீது வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

நேற்றையதினம் Sutherland நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட இந்நபர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ள அதேநேரம் எதிர்வரும் செப்டம்பர் 14ம் திகதி நீதிமன்றில் முன்னிலையாகவுள்ளார்.

இவர் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்படும்பட்சத்தில் ஆகக்கூடியது 25 வருட சிறைத்தண்டனை மற்றும்/அல்லது 1,050,000 டொலர்கள் அபராதம் விதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
