பப்புவா நியூ கினியிலுள்ள மனுஸ்தீவு தடுப்பு முகாம் நேற்று முன்தினம் மூடப்பட்டதைத் தொடர்ந்து, அங்குள்ள 600 க்கும் மேற்பட்ட அகதிகள் குறித்த முகாமிலிருந்து வெளியேற மறுத்து போராட்டம் நடத்திவருகின்றமை நாமறிந்த செய்தி.
இந்தப் பின்னணியில் மனுஸ் அகதிகளின் நிலை தொடர்பில் தாம் மிகுந்த கவலையடைந்துள்ளதாக, நியூசிலாந்து பிரதமர் Jacinda Ardern தெரிவித்துள்ளதாக New Zealand Herald பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
அகதிகள் விடயத்தில் ஆஸ்திரேலியா எதிர்கொள்ளும் நிலை, தமது நாட்டுக்கு இல்லை என்பது ஒரு அதிஷ்டமே என Jacinda Ardern தெரிவித்ததாகவும், மனுஸ் அகதிகள் தொடர்பில், பிரதமர் Malcolm Turnbull-உடன் ஞாயிற்றுக்கிழமை அவர் பேச்சு நடத்தவுள்ளதாகவும் அச்செய்தி மேலும் கூறுகின்றது.
கடந்த ஜுன் 2016-இல் நியூசிலாந்து பிரதமராக இருந்த John Key, ஆஸ்திரேலிய அரசு விரும்பினால், வருடமொன்றுக்கு தடுப்பு முகாம்களிலுள்ள 150 அகதிகளை தமது நாடு ஏற்றுக்கொள்ளத் தயார் என அறிவித்திருந்த நிலையில், இச்சலுகையைத் தமது ஆட்சியிலும் தொடர்வதற்குத் தயார் என Jacinda Ardern கூறியுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
இதேவேளை பிரதமராக பொறுப்பேற்றதன் பின் தனது முதலாவது உத்தியோகப்பூர்வ விஜயத்தை மேற்கொண்டு, எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை சிட்னி வரும் Jacinda Ardern, பிரதமர் Malcolm Turnbul-உடன் இரு நாடுகள் சம்பந்தப்பட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
