பப்புவா நியூ கினியிலுள்ள மனுஸ்தீவு தடுப்பு முகாம் மூடப்பட்டதைத் தொடர்ந்து, அங்குள்ள அகதிகள் குறித்த முகாமிலிருந்து வெளியேற மறுத்து போராட்டம் நடத்திவருகின்ற நிலையில், அவர்களுக்கான இடைத்தங்கல் முகாம்கள் தயார் நிலையில் இல்லை என்ற குற்றச்சாட்டை குடிவரவு அமைச்சர் மறுத்துள்ளார்.
கடந்த வாரம் செவ்வாய்க்கிழமை மனுஸ் தடுப்பு முகாம் நிரந்தரமாக மூடப்பட்டதையடுத்து, இம்முகாமிற்கான மின்சாரம், நீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் அனைத்தும் நிறுத்தப்பட்ட அதேநேரம் அங்குள்ள அகதிகளை சகல வசதிகளுடனும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள 3 தங்குமிடங்களுக்குச் செல்லுமாறு பப்புவா நியூகினி அரசு வலியுறுத்திவருகிறது.
ஆனால் அகதிகளுக்கென ஏற்பாடு செய்யப்பட்டுள்ள தங்குமிடங்கள் போதிய வசதிகளுடன் முற்றிலுமாக தயார் நிலையில் இல்லை என ஐநாவின் அகதிகளுக்கான அமைப்பான UNHCR-இன் பேச்சாளர் Catherine Stubberfield தெரிவித்திருந்தார்.
எனினும் இக்குற்றச்சாட்டினை மறுத்துள்ள குடிவரவு அமைச்சர் Peter Dutton குறித்த தங்குமிடங்கள் தயார் நிலையில் உள்ளதாகக் கூறியுள்ளார்.
இதேவேளை மனுஸ் தீவு தடுப்பு முகாமிலிருந்து வெளியேறி இடைத்தங்கல் முகாம்களுக்குச் செல்வதில் தமக்கு உடன்பாடு இல்லை என்பதுடன், அங்கு தமது உயிர்களுக்கு ஆபத்து எனக் கூறி அங்குள்ள 600 பேர் தமது போராட்டத்தைத் தொடர்கின்றமை குறிப்பிடத்தக்கது.
