பப்புவா நியூ கினியிலுள்ள மனுஸ்தீவு தடுப்பு முகாம் மூடப்பட்டதைத் தொடர்ந்து, அங்குள்ள 600 க்கும் மேற்பட்ட அகதிகள் குறித்த முகாமிலிருந்து வெளியேற மறுத்து போராட்டம் நடத்திவருகின்ற நிலையில், இவர்களை நியூசிலாந்து நாடு ஏற்றுக்கொள்ள முன்வந்தால் அந்த வாய்ப்பினை ஆஸ்திரேலியா பயன்படுத்திக்கொள்ள வேண்டுமென லேபர் கட்சி வலியுறுத்தியுள்ளது.
நியூசிலாந்து பிரதமராக இருந்த John Key, ஆஸ்திரேலிய அரசு விரும்பினால், வருடமொன்றுக்கு தடுப்பு முகாம்களிலுள்ள 150 அகதிகளை தமது நாடு ஏற்றுக்கொள்ளத் தயார் என அறிவித்திருந்த நிலையில், இவ்வாய்ப்பினை முன்னாள் லேபர் அரசும் தற்போதைய அரசும் மறுத்திருந்தன.
படகு மூலம் வந்தவர்களை நியூசிலாந்தில் குடியமர்த்தினால் ஆட்கடத்தல்காரர்கள் தமது வியாபாரத்தை மீண்டும் ஆரம்பிப்பதற்கு அது வழிகோலும் என இரு அரசுக்களும் தெரிவித்திருந்தன.
எனினும் தற்போது தமது நிலைப்பாட்டை மாற்றியுள்ள லேபர் கட்சி, நியூசிலாந்து அரசு மனுஸ் அகதிகளை உள்வாங்க முன்வந்தால், அதை ஏற்றுக்கொள்வது பற்றி ஆஸ்திரேலியா யோசித்துப் பார்க்கலாம் என எதிர்கட்சித் தலைவர் Bill Shorten தெரிவித்துள்ளார்.
இதேவேளை பிரதமராக பொறுப்பேற்றதன் பின், தனது முதலாவது உத்தியோகப்பூர்வ விஜயத்தை மேற்கொண்டு, நாளை சிட்னி வரும் Jacinda Ardern, பிரதமர் Malcolm Turnbull-உடன் மனுஸ் அகதிகள் விடயம் உட்பட, இரு நாடுகள் சம்பந்தப்பட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
