மனுஸ் தீவில் வாழும் அகதிகள் மற்றும் புகலிடக்கோரிக்கையாளர்கள் பலர் தற்கொலைக்கு முயற்சிக்கின்ற சம்பவங்கள் அங்கு தினசரி நிகழ்வாக மாறிவிட்டது என பப்புவா நியூகினியின் கத்தோலிக்க மதத்தலைவர்களில் ஒருவர் தெரிவித்துள்ளார்.
Catholic Bishops Conference of Papua New Guinea and Solomon Islands-இன் பொதுச்செயலாளர் Giorgio Licini கடந்தவாரம் மனுஸ் தீவுக்குச் சென்று நிலைமைகளை அவதானித்த பின்னர் இக்கருத்தினை வெளியிட்டுள்ளார்.
மனுஸ் தீவிலுள்ள அகதிகள் மற்றும் புகலிடக்கோரிக்கையாளர்களின் நிலை தொடர்பில் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள இவர், இரண்டு நாட்களில் 3 தற்கொலை முயற்சி சம்பவங்களைப் பார்வையிட்டுள்ளதாகவும் அங்குள்ளவர்கள் மருத்துவ சிகிச்சைக்காக மனுஸிலிருந்து வெளியே கொண்டுசெல்லப்பட வேண்டியது அவசியம் எனவும் தெரிவித்துள்ளார்.
எதிர்காலம் பற்றிய முடிவுகள் எதுவுமின்றி மிகநீண்ட காலம் மனுஸ்,Port Moresby பகுதிகளில் வாழ்ந்துவரும் அகதிகள் மற்றும் புகலிடக்கோரிக்கையாளர்களுக்கு இனியும் தாமதிக்காமல் தீர்வைப் பெற்றுக்கொடுக்குமாறு ஆஸ்திரேலிய அரசை வலியுறுத்தியுள்ள Giorgio Licini, குறித்த அகதிகள் மற்றும் புகலிடக்கோரிக்கையாளர்களை மனிதாபிமான அடிப்படையிலும் மருத்துவ காரணங்களுக்காகவும் பப்புவா நியூ கினியிலிருந்து வெளியே அழைத்துச்செல்லுமாறு வலியுறுத்தியுள்ளார்.
