பப்புவா நியூ கினியிலுள்ள மனுஸ்தீவு தடுப்பு முகாம் மூடப்பட்டதைத் தொடர்ந்து, அங்குள்ள 600 க்கும் மேற்பட்ட அகதிகள் குறித்த முகாமிலிருந்து வெளியேற மறுத்து போராட்டம் நடத்திவருகின்ற நிலையில், இம்முகாமிற்கான அடிப்படை வசதிகளை மீள வழங்குமாறு தாக்கல் செய்யப்பட்ட மனுவை, அந்நாட்டு நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
கடந்த செவ்வாய்க்கிழமை மனுஸ் தடுப்பு முகாம் நிரந்தரமாக மூடப்பட்டதையடுத்து, இம்முகாமிற்கான மின்சாரம், நீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் அனைத்தும் நிறுத்தப்பட்டன.
எனினும் குறித்த முகாமிலிருந்து வெளியேற மறுத்து போராட்டம் நடத்திவரும் தமது நிலையைக் கருத்திற்கொண்டு, அடிப்படை வசதிகளை மீள வழங்க வேண்டுமென வலியுறுத்தி, அங்குள்ள அகதிகள் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை தள்ளுபடி செய்த நீதிமன்றம், இக்கோரிக்கையில் தகுந்த காரணம் எதுவுமில்லை எனக் கூறியுள்ளது.
சகல வசதிகளுடனும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள 3 தங்குமிடங்களுக்குச் செல்லுமாறு பப்புவா நியூகினி அரசு அங்குள்ள அகதிகளை வலியுறுத்தியுள்ள போதிலும், மனுஸ் தீவு தடுப்பு முகாமிலிருந்து வெளியேறி இடைத்தங்கல் முகாம்களுக்குச் செல்வதில் தமக்கு உடன்பாடு இல்லை என்பதுடன், அங்கு தமது உயிர்களுக்கு ஆபத்து எனக் கூறி அங்குள்ள 600க்கும் மேற்பட்டவர்கள் தமது போராட்டத்தைத் தொடர்கின்றமை குறிப்பிடத்தக்கது.
