பப்புவா நியூகினி மற்றும் நவுறுவிலுள்ள, அகதிகள் மற்றும் புகலிடக்கோரிக்கையாளர்களுக்கான முக்கிய தேவைகளுக்கென, சுமார் $NZ3 மில்லியன் டொலர்களை($A2.7 மில்லியன்) நியூசிலாந்து அரசு வழங்கவுள்ளது.
நியூசிலாந்துப் பிரதமர் Jacinda Ardern மற்றும் ஆஸ்திரேலிய பிரதமர் Malcolm Turnbull ஆகியோருக்கிடையில், அகதிகள் விவகாரம் தொடர்பிலான இரண்டாவது சந்திப்பின் போது, இந்நிதியுதவி தொடர்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த அக்டோபர் 31ம் திகதி, பப்புவா நியூ கினியிலுள்ள மனுஸ்தீவு தடுப்பு முகாம் மூடப்பட்டதைத் தொடர்ந்து, அங்கிருந்து வெளியேற மறுத்து 420 பேர் போராட்டம் நடத்திவருகின்ற பின்னணியில், வருடமொன்றுக்கு 150 அகதிகளை தமது நாட்டில் குடியமர்த்துவதற்கான வாய்ப்பை ஆஸ்திரேலியா பயன்படுத்திக்கொள்ள வேண்டுமெனவும் இச்சந்திப்பின்போது நியூசிலாந்துப் பிரதமர் வலியுறுத்தியுள்ளார்.
இதேவேளை மனுஸ் முகாமிலிருந்து வெளியேற மறுத்து போராட்டம் நடத்துபவர்கள், சகல வசதிகளுடனும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள 3 தங்குமிடங்களுக்குச் செல்ல வேண்டுமென, பப்புவா நியூகினி அரசு தொடர்ச்சியாக அறிவித்துவருகின்றது.
ஆனால் மனுஸ் தீவு தடுப்பு முகாமிலிருந்து வெளியேறி இடைத்தங்கல் முகாம்களுக்குச் செல்வதில் தமக்கு உடன்பாடு இல்லை என்பதுடன், அங்கு தமது உயிர்களுக்கு ஆபத்து எனக் கூறி அங்குள்ள 420 பேர் தமது போராட்டத்தைத் தொடர்கின்றமை குறிப்பிடத்தக்கது.
