ஆஸ்திரேலியாவுக்கு படகில் வந்து தற்போது நவுறு மற்றும் மனுஸ் தீவுகளிலுள்ள அகதிகளில் இருநூறு பேர்வரையிலானோரை கனடாவில் குடியமர்த்துவதற்கான புதிய ஏற்பாடொன்றை கனடிய மற்றும் ஆஸ்திரேலிய அகதிகள் நல அமைப்புக்கள் இணைந்து மேற்கொண்டுவருவதாக தெரிகிறது.
கடந்த வருடம் மலேசிய விமானத்தில் வந்திறங்கிய சிரிய அகதி ஒருவரின் முயற்சியினால் இந்த ஏற்பாடு ஆரோக்கியமான பாதையில் முன்னெடுக்கப்பட்டுவருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Hassan Al-Kontar என்ற சிரிய அகதி,கடந்த ஆண்டு மலேசியாவில் வந்து இறங்கியபோது அவர் மலேசியாவுக்குள்ளேயும் அனுமதிக்கப்படவில்லை. அதேவேளை, சிரியாவுக்கும் திருப்பி அனுப்பப்படமுடியாதநிலை காணப்பட்டது.
அப்போது தனிப்பட்ட ரீதியில் ஸ்பொன்ஸர் மூலம் கனடாவுக்கு அழைக்கப்பட்டு அங்கு தற்போது வதிவிட உரிமையை பெற்றுள்ளார். அவர் அங்கு சென்று சேர்ந்ததைப்போல, மீளாத்துயரில் மாட்டியுள்ள மனுஸ் - நவுறு தீவிலுள்ள அகதிகளையும் கனடாவிற்கு ஸ்பொன்ஸர் விசா மூலம் மீள்குடியமர்த்துவதற்கு அவர் அங்கு முயற்சிகளை மேற்கொண்டிருக்கிறார்.
கனடாவில், இதற்காக லாபநோக்கற்ற தொண்டு அமைப்பு ஒன்றினை நிறுவி, ஆஸ்திரேலியாவிலுள்ள அகதிகள் நல அமைப்புடன் இணைந்து இந்த ஏற்பாட்டினை முன்னெடுப்பதற்கு Hassan Al-Kontar முயற்சித்துள்ளார்.
கனடாவுக்கு அகதிகளை தனிப்பட்ட ஸ்பொன்ஸர்கள் மூலம் அழைக்கலாம். ஆனால், அவர்களுக்குரிய தங்குமிட வசதி, உணவு மற்றும் அத்தியாவசிய தேவைகளுக்குரிய நிதியை ஸ்பொன்ஸர் செய்பவர்கள் முன்கூட்டியே குடிவரவுத்திணைக்களத்துக்கு காண்பிக்கவேண்டும்.
அந்த வகையில் ஒரு அகதிக்கு 18 ஆயிரம் டொலர்கள்படி - அகதிகள் விண்ணப்ப கட்டணங்கள் உட்பட - 200 பேரளவில் ஸ்பொன்ஸர் செய்வதற்கு 3.7 ஆஸ்திரேலிய டொலர்கள் தற்போதைக்கு தேவைப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த திட்டத்தின் அடிப்படையில், மனுஸ் - நவுறு அகதிகளை கனடாவில் குடியமர்த்துவதற்கு ஏதுவாக நிதிசேகரிப்பு உள்ளிட்ட ஏனைய ஏற்பாடுகள் தற்போது நடைபெற்றுவருவதாக கூறப்பட்டுள்ளது.
சுமார் ஆறு வருடங்களுக்கு மேலாக மனுஸ் - நவுறு தீவுகளிலுள்ள அகதிகள் பலர் அமெரிக்காவில் குடியமர்த்தப்படுவதற்காக பரிசீலிக்கப்பட்டபோது - பாதுகாப்பு காரணங்களுக்காக நிராகரிக்கப்பட்டுள்ளார்கள் ஆனால், அவர்கள் ஆஸ்திரேலிய அரசினால் அச்சுறுத்தலானவர்கள் என்று கருதப்பட்டவர்கள் அல்லர் என்பது குறிப்பிடத்தக்கது.
