மனுஸ் மற்றும் நவுறு தீவுகளிலுள்ள ஆஸ்திரேலிய அகதிகளில் இன்னும் 250 பேர் அமெரிக்காவில் குடிமயர்த்தப்படுவர் என்று தான் எதிர்பார்ப்பதாக உள்துறை அமைச்சர் பீற்றர் டட்டன் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற கேள்வி நேரத்தின்போது நேற்று அவர் இந்த தகவலை வெளியிட்டார்.
ஆஸ்திரேலிய - அமெரிக்க அரசுகளுக்கு இடையில் செய்துகொள்ளப்பட்ட இணக்கப்பட்டின் பிரகாரம், மனுஸ் மற்றும் நவுறு தீவுகளிலுள்ள சுமார் 1250 அகதிகளில் இதுவரை 632 பேர் அமெரிக்காவில் மீளக்குடியமர்த்தப்பட்டுள்ளார்கள்.
முன்னர் செய்துகொண்ட ஒப்பந்தத்தின் பிரகாரம் இன்னும் 250 பேரை அமெரிக்கா ஏற்றுக்கொள்ளும் என்று எதிர்பார்ப்பதாக டட்டன் கூறினார்.
நேற்று நாடாளுமன்றத்தில் அவர் மேலும் பேசுகையில் - மருத்துவ காரணங்களுக்காக ஆஸ்திரேலியாவுக்கு அகதிகளை கொண்டுவரும் நோக்கத்துடன் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட medevac சட்டத்தின் கீழ் மனுஸ் - நவுறு தீவுகளிலிருந்து இதுவரை 135 பேர் ஆஸ்திரேலியா அழைத்துவரப்பட்டதாகவும் ஆனால் அவர்களில் 13 பேர் மட்டுமே மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டதாகவும் குறிப்பிட்டார்.
இவ்வாறு ஆஸ்திரேலியா அழைத்துவரப்பட்டவர்களில் ஆறு பேர் பாரதூரமானவர்கள் என்றும் ஒருவர் ஈரான் இராணுவத்தில் செயற்பட்டிருக்கிறார்-ஏனையவர்களில் சிலர் விபச்சாரம் மற்றும் குற்றவியல் நடவடிக்கைகளில் தொடர்புபட்டவர்கள் எனவும் தான் நம்புவதாக பீட்டர் டட்டன் தெரிவித்தார்.
விமானம் மூலம் வந்திறங்கும் அகதிகள் தொடர்பில் லேபர் கட்சி வெளியிட்டுவரும் கருத்துக்களை கடுமையாக விமர்சித்த டட்டன், மிகச்சிறிய எண்ணிக்கையில் இவ்வாறான அகதிகள் வருகிறார்கள் என்று கூறினார்.
