ஆஸ்திரோலியாவிடம் தஞ்சம் கோரி படகுகள் மூலம் வந்தவர்களை மனுஸ் மற்றும் நவுறு தீவுகளிலுள்ள முகாம்களில் கொண்டு சென்று தடுத்துவைப்பதற்கு லேபர் கட்சி முடிவுசெய்ததன் ஐந்தாவது ஆண்டு நிறைவை நினைவு கூரும் முகமாக அகதிகள் நல அமைப்புக்கள் நாடளாவிய ரீதியில் அமைதிப்போராட்டங்களை ஆரம்பித்துள்ளன.
2013 ஆம் ஆண்டு கெவின் ரட் அரசு நடைமுறைக்கு கொண்டுவந்த மனுஸ் - நவுறு தீவு அகதிகள் முகாம் ஏற்பாட்டின்பிரகாரம், அங்குகொண்டு சென்று தடுத்துவைக்கப்பட்டவர்களில் இதுவரை 12 தஞ்சக்கோரிக்கையாளர்கள் உயிரிழந்துள்ளனர்.
ஆஸ்திரேலியாவுக்கு தஞ்சம் கோரி வந்த சுமார் 1600 பேர் அந்த தீவுகளில் இன்னமும் தங்கவைக்கப்பட்டிருக்கிறார்கள்.அவர்களை ஆஸ்திரேலியாவிற்குள் அனுமதிப்பதில்லை என்பிதில் ஆஸ்திரேலிய அரசு கடும்போக்கை கடைப்பிடித்துவருகிறது.
ஆஸ்திரேலிய அரசின் இந்த நடவடிக்கையை கண்டித்தும் மேற்படி முகாம்களை உடனடியாக மூடி அனைத்து தஞ்சக்கோரிக்கையாளர்களையும் ஆஸ்திரேலியா உள்வாங்கவேண்டும் என்று கோரியும் அகதிகள் நல அமைப்புக்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களின் அலுவலகங்களுக்கு வெளியில் மெழுகுதிரி ஏந்தி போராட்டம் நடத்திவருகிறார்கள்.
அதேவேளை, எதிர்க்கட்சி தலைவர் Bill Shorten-இன் மெல்பேர்ன் அலுவலகத்தின் முன்பாக நடத்தப்பட்ட போராட்டத்தின்போது - வெறுமையான கதிரைகளை வைத்து அவற்றில் மனுஸ் - நவுறு அகதி முகாம்களில் உயிரிழந்தவர்களின் படங்களை வைத்து அவற்றுக்கு முன்பாக காலணிகளையும் முன்வைத்து அமைதி ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது.
