மனுஸ் தீவிலுள்ள அகதி ஒருவர் அப்பகுதியை சேர்ந்த நபரால் தாக்கப்பட்டு நினைவிழந்த நிலையில் Lorengau ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
முகத்தில் படுகாயமடைந்துள்ள இந்த அகதிக்கு எக்ஸ்ட்ரே சோதனைகளை நடத்துவதற்கு மருத்துவர்கள் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த சம்பவம் கடந்த சனிக்கிழமை இடம்பெற்றதாக அறியவருகிறது.
ஈரான் நாட்டைச்சேர்ந்த 42 வயதுடைய இந்த நபர் மனுஸ் தீவில் தடுத்துவைக்கப்பட்டிருந்த காலப்பகுதியில் மனுஸ் தீவைச்சேர்ந்த பெண் ஒருவரை காதலித்து திருமணம் செய்திருந்தார்.
இவர் மீது தாக்குதல் மேற்கொண்ட நபர் மனுஸ்தீவை சேர்ந்தவர் என்று பொலீஸார் தெரிவித்துள்ளனர். தாக்குதல் நடத்தியவரின் அடையாளங்கள் தமக்கு தெரியும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.
கூரிய பலகை ஒன்றினால் வலது கண்ணுக்கு மேல் தாக்குதல் மேற்கொண்டதையடுத்து குறிப்பிட்ட ஈரானிய அகதி படுகாயத்துக்கு உள்ளாகியுள்ளார் என்றும் பொலீஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.
தாக்குதலுக்குள்ளான நபர் தாக்குதல் நடத்தப்பட்ட இடத்தில் பல மணிநேரம் காயத்துடன் நினைவிழந்த நிலையில் கிடந்துள்ளார் என்று அவரது நண்பர்கள் கூறியுள்ளனர். அவருக்கு உரிய மருத்துவ உதவிகளை வழங்குவதற்கு மனுஸ் தீவில் போதிய வசதிகள் இல்லை என்றும் அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.
மனுஸ் தீவு பெண்களை திருமணம் செய்த வெளிநாட்டவர்களை மனுஸ் தீவு மக்கள் மதிக்கவேண்டும் என்று பொதுமக்களை கோரியுள்ள பொலீஸ் அதிகாரி David Yapu, தாக்குதல் தொடர்பான விசாரணைகளை தாம் மேற்கொண்டுவருவதாகவும் சந்தேக நபர் மிகவிரைவில் கைது செய்யப்படுவார் என்றும் கூறியுள்ளார்.
