மனுஸ் அகதிகள் 150 பேரை ஏற்றுக்கொள்ள முன்வருவதாக நியூசிலாந்து அரசு அறிவித்தமையானது, இரு நாடுகளுக்கிடையிலான உறவைப் பாதிக்கக்கூடுமென ஆஸ்திரேலியாவின் துணைப் பிரதமர் Barnaby Joyce தெரிவித்துள்ளார்
நேற்றையதினம் நியூசிலாந்து வானொலி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கருத்துத் தெரிவித்த Barnaby Joyce, நியூசிலாந்து அரசு, ஆஸ்திரேலிய அரசின் கொள்கைகளில் தலையிடுவதிலிருந்து ஒதுங்கி இருப்பது நல்லது எனக் கூறியுள்ளார்.
இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள நியூசிலாந்துப் பிரதமர் Jacinda Ardern, அகதிகளை உள்வாங்குவது குறித்த தமது அறிவிப்பை, ஆஸ்திரேலிய அரசியல்வாதிகள் அதீத உணர்வுப்பூர்வமாக அணுகுவதாக கூறியுள்ளார்.
மேலும் ஆஸ்திரேலிய அரசு விரும்பினால் வருடமொன்றுக்கு 150 அகதிகளை தமது நாடு ஏற்றுக்கொள்ளும் என்ற அறிவிப்பு தொடர்பில் கடந்த பல நாட்களாக தாம் எந்த இடத்திலும் பேசவில்லை எனத் தெரிவித்த Jacinda Ardern, ஆஸ்திரேலிய அரசியல்வாதிகளே தொடர்ந்து அதுபற்றி பேசிக்கொண்டிருப்பதாக கூறினார்.
