நியூஸிலாந்திற்கு கல்வி கற்பதற்கான விஸாவில் சென்ற இந்திய பிரஜை ஒருவர் அந்நாட்டின் குடியுரிமையுடைய விசேட தேவைக்குட்பட்ட பெண்ணை திருமணம் செய்து, அவரை தனது நண்பர்களுடன் இணைந்து பாலியல் துன்புறுத்தல்களுக்கு உட்படுத்திவரும் தகவல் பொலீஸாருக்கு எட்டியுள்ளதாக nzherald பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
விசேட கவனிப்புத் தேவைப்படும் குறிப்பிட்ட பெண், 18 வயதுடையவரென்றாலும், அவருக்கு ஏழு வயதுச்சிறுமிக்குரிய நடத்தைகளே காணப்படுவதாக, இவரது உளவள தேவைகள் குறித்த பணிகளில் ஈடுபட்டுவரும் சமூகநல உத்தியோகத்தர் தெரிவித்துள்ளார்.
அந்தப்பெண் தொடர்ச்சியான பாதிப்புக்களை எதிர்நோக்கிவருவதை கண்டுபிடித்த குறிப்பிட்ட சமூக நல உத்தியோகத்தரே இந்த விடயத்தை பொலீஸாரிடம் கொண்டு சென்றுள்ளார் என்று nzherald தெரிவித்துள்ளது.
குறிப்பிட்ட பெண்ணை தனது நண்பர்களிடம் பணத்துக்காக விபச்சாரத்துக்கு கொடுத்து வாங்கும் நடவடிக்கையை அவரது கணவர் மேற்கொண்டுவருகிறார் என்றும், தனக்கு நியூஸிலாந்து குடியுரிமை கிடைக்கும்வரையில்தான் அந்தப்பெண்ணை மனைவியாக வைத்திருக்கிறார் என்றும் குறிப்பிட்ட சமூக நல உத்தியோகத்தர் கூறியுள்ளார்.
இந்த விடயம் தற்போது நியூஸிலாந்து பொலீஸாரிடம் முறையிடப்பட்டு குறிப்பிட்ட பெண்ணின் குடும்பத்தினருடன் பொலீஸார் பேசியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றபோதும், இந்த விடயத்தில் இன்னும் எவருக்கு எதிராகவும் எந்த குற்றச்சாட்டுக்களும் பதிவு செய்யப்படவில்லை என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
