நவுறு மற்றும் மனுஸ் தீவுகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அகதிகள் மருத்துவ தேவைக்காக ஆஸ்திரேலியாவின் பிரதான நிலப்பரப்பிற்கு வராமல் கிறிஸ்மஸ் தீவுக்கு மட்டும் வரமுடியும் என்ற அரசின் தீர்மானம் கடும் விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ளது.
நவுறு மற்றும் மனுஸ் அகதிகள் மருத்துவ தேவைக்காக ஆஸ்திரேலியா அழைத்துவரப்படுவதை இலகுவாக்கும் சட்டம் அண்மையில் நிறைவேற்றப்பட்ட நிலையில், மருத்துவ உதவி தேவைப்படுபவர்கள் கிறிஸ்மஸ் தீவுக்கு அனுப்பிவைக்கப்படுவார்கள் என உள்துறை அமைச்சர் Peter Dutton நேற்று அறிவித்திருந்தார்.
இதற்கேற்ப ஆஸ்திரேலியாவின் கட்டுப்பாட்டின்கீழ் உள்ள கிறிஸ்மஸ் தீவு முகாம் சுமார் 1 பில்லியன் டொலர் செலவில் மீள திறக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.
மருத்துவ உதவி தேவைப்படும் அகதிகளை கிறிஸ்மஸ் தீவுக்கு அனுப்புவது என்பது அரசின் பொதுவான நிலைப்பாடாக இருக்கும் என்றும் ஆனால் ஒருவருக்கு மேலதிக தேவைகள் இருப்பின் அதுதொடர்பில் விசேடமாக ஆராயப்பட்டு முடிவு எடுக்கப்படும் என்றும் Peter Dutton கூறியுள்ளார்.
எனினும் நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்ட சட்டமானது ஆஸ்திரேலியாவின் பிரதான நிலப்பரப்பில்வைத்து அகதிகளுக்கு மருத்துவ உதவி வழங்குவது என்ற அடிப்படையிலேயே உருவாக்கப்பட்டதாகவும் ஆனால் அரசு தற்போது எவ்வித வசதிகளுமற்ற கிறிஸ்மஸ் தீவுக்கு அகதிகளை அனுப்ப முயற்சிப்பதாகவும் கிரீன்ஸ்கட்சி சாடியுள்ளது.
இச்சட்டத்திற்கு லேபர் கட்சி ஆதரவு வழங்கியிருந்த நிலையில், இது தொடர்பில் கருத்து தெரிவித்த எதிர்கட்சித் தலைவர் Bill Shorten, அகதிகளுக்கு மருத்துவ உதவி கிடைக்க வேண்டும் என்பதே தமது விருப்பம் எனவும், அவர்களுக்குத் தேவையான உதவி கிறிஸ்மஸ் தீவில் கிடைக்குமென்றால் அதுதொடர்பில் தமக்கு ஆட்சேபணை இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.
